சிறப்பு மருத்துவர்கள் நியமன முறைகேடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

228 0

சிறப்பு மருத்துவர்கள் நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு 556 சிறப்பு மருத்துவர்கள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்கள். இவர்களை தேர்வு செய்வதில் அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. வழக்கமாக அரசு மருத்துவ மனைகளுக்கு உதவி மருத்துவர்களை நியமிப்பதாக இருந்தால் கூட தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வு நடத்தி தான் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இம்முறை உதவிப்பேராசிரியர் நிலையிலான சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்வதில் இந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அவ்வளவு ஏன் விண்ணப்பங்கள் கூட பெறப்படவில்லை. மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் மூலம் உடனடி நேர்காணல் அறிவிக்கப்பட்டு, அதில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அத்துறையின் அதிகாரிகளும் காட்டிய வேகம் மெய்சிலிர்க்க வைத்தது. தேர்வு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அனைவருக்கும் கடந்த 17, 18 ஆகிய நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலேயே பணியிடம் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த மூன்றாவது நாளில், அதாவது நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் ஆட்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளனர். ஆனால், சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டப்பட்டதற்கு காரணம் ஊழல் தான். சிறப்பு மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 556 பேரில் 441 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள். ஒவ்வொரு பணியிடத்திற்கும் லட்சக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு தான் அவர்களுக்கு அவசர, அவசரமாக நியமன ஆணை வழங்கப்பட்டதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தகுதி, திறமையுடன் அரசு கல்லூரிகளில் படித்து, அரசு மருத்துவமனைகளில் சேவை செய்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை வழங்காமல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பணம் செலுத்தி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதன் நோக்கத்தை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் நியமனத்திலும் ஊழலை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் விளைவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சீரழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. இட ஒதுக்கீட்டு விதிகளையும், மரபுகளையும் காற்றில் பறக்க விட்டு, நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தை அரசு ரத்து செய்து விட்டு, அரசு சேவையில் உள்ள மருத்துவர்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிக்க வேண்டும். இதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி வரும் ஆளுனர் இப்பிரச்சினையில் தலையிட்டு நீதி வழங்கினால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment