அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். முடிவு

213 0

அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளனர்.

கட்டுக் கோப்பான கட்சி என்று பெயர் எடுத்த அ.தி.மு.க. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்டுப் பாடு இல்லாத கட்சியாக மாறிவிட்டது.

பத்திரிகையாளர்களை கண்டாலே பேட்டி கொடுக்க தயங்கிய அமைச்சர்கள் பலர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு துணிந்து மனதில் பட்டதை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், வெல்ல மண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் கட்சி ரீதியான கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.

சில அமைச்சர்கள் வெளிப் படுத்தும் கருத்து கட்சிக் குள் அவ்வப்போது பெரும் சலசலப்பையும், தர்மசங் கடத்தையும் உருவாக்கி விடுவதாக தொண்டர்களும், நிர்வாகிகளும் கருதுகின் றனர்.

அ.தி.மு.க.வில் செய்தி தொடர்பாளர்களாக பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், வைகைச் செல்வன் உள்பட பலர் இருந்தும் இவர்களை விட அமைச்சர்களின் பேட்டிகள் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி அணியு டன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி யினர் கட்சியில் ஒன்றாக இணைந்த பிறகும் நிர்வாகி கள் மத்தியில் இன்னும் ஒருங்கிணைப்பு ஏற்பட வில்லை. தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல் சிலர் உள்ளனர்.

இதுபற்றி மைத்ரேயன் எம்.பி. சில கருத்துக்களை வெளிப்படுத்தியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறுகையில், கட்சி வி‌ஷயங்களை வெளியில் பேசக்கூடாது, கட்சிக்குள் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் மேலும் 4 நிர்வாகிகளை கூடுதலாக நியமிக்க தலைமை கழகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி ஆகியோர் ஆட்சிமன்ற குழு வில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக கருதப்படும் கே.பி.முனுசாமி, ஆட்சி மன்ற குழு நிர்வாகிகள் குறித்தும், மதுரையில் நடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்காதது பற்றியும் பேசினார்.

இதற்கு கூட்டத்தில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக கூச்சல், குழப்பம் நீடித்ததால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சமாதானம் செய்தார். அப்போது அவர், நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற முடியும். கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்த முடியும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர் பத்திரிகையாளர்களுக்கு செய்தி தொடர்பாளர்கள் தான் பேட்டி அளிக்க வேண்டும். மற்ற யாரும் பேட்டியோ, முகநூலிலோ கருத்து தெரிவிக்க கூடாது என்று தெரிவித்தார். இதே கருத்தை ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்தார்.

எனவே அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் செய்தி தொடர்பாளர்களாக கூடுதலாக ஓரிரு நாளில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment