ஐந்து பேருக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது வடக்கு!

895 0

ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்ற விகிதத்தில் வடமாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டினார். முல்லைத்தீவு மாவட்டமானது எட்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதம் காணப்படுகிறது. யுத்தம் முடிந்து எட்டரை வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள போதும் தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

பெருமளவு இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விளைநிலங்களும், மேட்டுக்காணிகளும் அரசாங்கத்தின் துணையுடன் முப்படையினரானலும் கபளீகரம் செய்யப்படுகிறது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பின்னரும் காணிவிடுவிப்பதற்கான போராட்டங்கள் நடைபெறுகின்றதே தவிர, காணிகளை விடுவிப்பதற்கான எவ்வித எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை.ஒரு பக்கம் சொற்பமான காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மறுபுறம் வேறு வழிகளில் காணிகளை சூறையாடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு-கிழக்கில் இராணுவமயமாக்கல் என்பது புதிய சிங்கள கொலனிகளைப் பாதுகாப்பதற்காகவும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பயன்படுத்தப்படுகின்றது. காணிகளை விடுவிக்கின்றோம், இராணுவத்தை குறைக்கின்றோம் என்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் எல்லாம் போலி வாக்குறுதிகளாகவே உள்ளன. யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரின் தேவைக்காகவும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகிறது. மக்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த காணிகளை வன இலாகா தனது காணிகள் என்று அவர்களை உள்நுழைய விடாமல் தடுக்கிறது. இதனால் காலாதிகாலமாக தமது காணிகளில் பயிரிட்டு வந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதாகவும் சிவக்தி ஆனந்தன் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் இருந்த இடத்தை இராணுவத்தினருக்குக் கொடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதனை நிறுத்தி ஏற்றுமதி விவசாய உற்பத்தி மையமாக இதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள். இராணுவம் அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.

Leave a comment