மன்னார் மாவட்ட கலை இலக்கியப் பெருவிழாவிற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை!

268 0

மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா இன்று மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற உள்ள நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள மன்னார் மாவட்ட பிராந்தி ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா 2017” இன்று மாலை 2 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெறவுள்ளது.

குறித்த நிகழ்வுகளுக்கு விருந்தினர்களாக அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த ‘மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா 2017’ கலந்து கொள்ள பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு மாவட்டச் செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது மன்னார் மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment