ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி அரசாங்கத்தை மக்கள் நீக்குவார்கள்: துரைமுருகன்

312 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கியதுபோல், போலி அரசாங்கத்தையும் மக்கள் நீக்குவார்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் துரை முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. விற்கு வழங்கிய மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் அறிவித்ததில் உள்நோக்கம் உள்ளது என்று மக்களே நினைக்கிறார்கள்.

இதற்கு பின்னால் யாரோ உள்ளார்கள். அவர்களை கண்டு தி.மு.க. அஞ்சாது. அ.தி. மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அதிகார பலத்தில் இருந்தபோதே தேர்தலில் அவர்களை தி.மு.க. தோற்கடித்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வ வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது.

மக்கள் மத்தியில் யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வி உள்ளது. அ.தி. மு.க.வை மக்கள் தூக்கி எறிவார்கள். புதிய திருப்பம், புதிய மறுமலர்ச்சி, புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த வல்லமை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்கனவே எங்களோடு உள்ள தோழமை கட்சிகளை தொடர்பு கொள்வோம்.

இந்த தேர்தலில் எங்களுக்கு இருந்த ஒரே எதிரி கட்சி அ.தி.மு.க. தான். அக்கட்சியினர் தற்போது இரண்டாகி இருக்கிறார்கள்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பணப்பட்டுவாடா நடைபெற்றது என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது. அமைச்சர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் கமி‌ஷன் தேர்தலை அறிவித்துள்ளது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்களை நீக்கியதுபோல், போலி அரசாங்கத்தையும் மக்கள் நீக்குவார்கள். இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment