ஜனாதிபதியை விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கே அதிகாரங்கள் உள்ளது. நாட்டினை பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் இவர்களே முன்னின்று செயற்பட்டு வருவதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இவர்களின் சகல முயற்சிகளையும் தோற்கடித்து நாட்டை காப்பாற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சபையின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ரியல் அட்மிரல் சரத் வீரசேகர செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
யுத்த குற்றம் எழ காரணமே தருஸ்மான் அறிக்கை தான். இறுதி யுத்தத்தை 40 ஆயிரம் பொதுமக்களை கொன்றதாக தெரிவித்தமையே பிரச்சினைகள் உருவாக காரணமாகும். யுத்தத்தில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் சர்வதேச நாடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் கடவுச்சீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன. எமக்கு சார்பான எந்தவொரு அறிக்கையையும் அரசாங்கம் ஜெனிவாவில் சமர்ப்பிக்கவில்லை. இவற்றை சமர்ப்பித்திருந்தால் எமக்கு எதிரான அழுத்தங்கள் எழுந்திருக்கப் போவதில்லை. ஆகவே அரசாங்கமே திட்டமிட்டு இந்த மோசடிகளை செய்து வருகின்றது. ஜனாதிபதியையும் பிரச்சினைகளில் சிக்க வைக்கும் முயற்சிகளும் இதன் பின்னணியில் உள்ளது. ஆகவே ஜனாதிபதி மிகத் தெளிவாக தீர்மானம் எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரே இன்று புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க முயற்சித்து வருகின்றனர், ஜனாதிபதியை விடவும், சம்பந்தனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்குமே இன்று அதிகாரம் உள்ளது. அவர்கள் நினைப்பதே இன்று இடம்பெற்று வருகின்றது. சம்பந்தன் ஒரு நடுநிலைவாதியாகவும், நாட்டினை நேசிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் அனைவரும் நாட்டினை பிரிக்க ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டு வந்ததை இவர்கள் மறந்துவிட்டு கருத்து கூறுகின்றனர்.
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் அரசாங்கம் ஒரு அடி பின்வாங்கியுள்ளதாக தெரிகின்றது. காணாமல் போனோர் காரியாலயம் உருவாக்கிய போதும், சர்வதேச அழுத்தம் ஏற்படும் போதும் அரசாங்கம் செயற்பட்டதைபோல அல்லாது சற்று மாற்று விதத்தில் சதிகளை கொண்டு செயற்பட்டு வருவதாக தெரிகின்றது. அரசியல் அமைப்பு குறித்து அரசாங்கத்தில் பல்வேறு கருத்துக்கள் முரண்பாடுகள் உள்ளன. அதேபோல் சிவில் அமைப்புகள், மாநாயக்க தேரர்கள் அனைவரும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் அரசாங்கம் ஒரு அடி பின்வாங்கியுள்ளதாக தெரிகின்றது. இந்த அரசாங்கத்தை உருவாக்கிய சர்வதேச சக்திகள், இரகசிய அமைப்புகள், புலம்பெயர் அமைப்புகள் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் தமது தேவைகளை நிறைவேற்ற எந்த வகையிலேனும் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சட்டத்துக்கு முரணாகவோ மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துகொண்டோ ஏதேனும் ஒரு வகையில் அரசியல் அமைப்பு கொண்டுவரப்படும். முழுமையாக மாற்றம் செய்யாவிட்ட லும் அதிகாரப் பகிர்வு, மாகாணசபை பலத்தை அதிகரிக்கும், நாட்டினை துண்டாடும் ஏதேனும் திட்டங்களை கொண்டுவருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பை கவனத்தில் கொண்டு கண்கட்டி வித்தையை செய்தேனும் புலம்பெயர் அமைப்புகளுக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் ஏற்ற தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும். எனவே இவர்களின் சகல முயற்சிகளையும் தோற்கடித்து நாட்டினை காப்பாற்ற மக்களின் ஒன்றிணைக்க வேண்டும். மக்கள் உண்மைகளை புரிந்து கொண்ட ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டினை துண்டாடும் வகையிலும் வடக்கு கிழக்கை தமது ஆக்கிரமிப்பில் வைத்து கொண்டு மீண்டும் புலிகளை உருவாக்கவே புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க சர்வதேச சக்திகள் முயற்சித்து வருகின்றது. அதற்காகவே இராணுவ குற்றங்கள் செய்ததாகவும், 40 ஆயிரம் பொதுமக்களை கொலை செய்ததாகவும் கூறி எம்மீது குற்றம் சுமத்தியும், வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகாரங்களை உச்ச அளவில் பகிரப்பட வேண்டும் எனவும் கூறிக் கொண்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த அரசாங்கமும் சர்வதேசமும் கூறும் காரணிகளை ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றதே தவிர இலங்கையின் இராணுவத்தை பாதுகாக்கவோ நாட்டினை ஐக்கியப்படுத்தவோ முயற்சிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த அரசியல் அமைப்பு உருவாக காரணமே யுத்த குற்றச்சாட்டு தான். யுத்த குற்றத்தை கூறி அதன் மூலமாக நாட்டினை பிரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே புதிய அரசியல் அமைப்பு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்றனர். மேற்கு நாடுகளுக்கு என்ன தேவை உள்ளதோ அதே நிலைப்பாட்டில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். இந்த நாட்டினை பிரிக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். மைத்திரி – ரணில் கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டதே நாட்டினை துண்டாட வேண்டும் என்ற பிரதான காரணத்தை கொண்டேயாகும் எனவும் குறிப்பிட்டார்.