எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன –சிறிசேன

288 0

மூன்று வருடங்களிற்கு முன்னர் இது போன்றவொரு நாளில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன் இன்று அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல விடயங்கள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மின் கட்டமைப்பிற்கு 100 மெகாவோட் சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நிறைவுகூரும் முகமாக இன்று (21) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று தன் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்திற்கேற்ப, ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண்விரயம் என்பவற்றுடன்கூடிய ஊழல் அரசியலை நாட்டில் இல்லாமற்செய்து சிறந்த பண்புகளுடன் கூடிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி தெரிவித்தார்.

நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் சித்தியடைந்துள்ளதா இல்லையா என்பது குறித்து தற்போது யாராலும் உறுதிப்படுத்த முடியாது என்பதுடன் நல்லாட்சி அரசின் பதவிக்காலம் நிறைவடைகையில் தாம் சித்தியடைந்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களையும் தரவுகளையும் முன்வைக்கக்கூடிய ஆற்றல் தமக்கு காணப்படுகின்றதென ஜனாதிபதி தெரிவித்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்நோக்கியிருந்த பாரிய சவாலான விடயமாகக்
காணப்பட்ட சர்வதேசத்தை வெற்றி கொள்ளும் சவாலினை வெற்றிகொண்டது மட்டுமன்றி உலகின் அனைத்து நாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டின் மேலும் பல இலக்குகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

நாட்டிற்கு விதிக்கப்படவிருந்த பல்வேறு சர்வதேச தடைகள் நீக்கப்பட்டமை, அன்றைய அரசியல்
மேடைகளிலும் ஊடகங்களிலும் அடிக்கடி பேசப்பட்ட மின்சாரக் கதிரை பற்றிய விடயங்கள்,
சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்கு
வரவழைத்தல் பற்றிய விடயங்கள் முற்றாக நீக்கப்பட்டமை, 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மனித உரிமைகளை பலப்படுத்தி, சகல துறைகளும் சுயாதீனமாக செயற்படக்கூடியவாறு சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமை மற்றும் அரச தலைவர்களால் நீதிமன்ற செயற்பாடுகளில் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகளை முற்றிலுமாக இல்லாமற்செய்து சட்டத்தின் ஆதிக்கத்தினை உறுதிசெய்தமை என்பன பெற்றுக்கொள்ளப்பட்ட சில வெற்றிகளாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் நாடு எதிர்நோக்கிய கடன்சுமையைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் தற்போது சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஏற்படாது மூன்று வருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட
நிலைமையே நாட்டில் காணப்பட்டிருப்பின், நாடு இன்று எதிர்நோக்கியிருக்கக்கூடிய நிலைமையை சகலரும் கவனத்திற் கொள்ளவேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Leave a comment