வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

353 0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் நாளைக் காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு, பதவியுயர்வு , மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து  இந்த்த் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நாளை புதன்கிழமை காலை 7 மணி தொடக்கம் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 7 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர்.
நோயாளர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசரசிகிச்கைக்கு மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் நாளைக் காலை 7 மணி தொடக்கம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவர் என அந்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் த.பானுமகேந்திரா அறிவித்தார்.

Leave a comment