பழனிசாமி விழாவிற்காக தஞ்சையில் அரசு கல்லூரி மைதானத்தை சீரழிப்பதா: ராமதாஸ் கண்டனம்

230 0

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக தஞ்சையில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தை சீரழிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தஞ்சாவூரில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான வாகன நிறுத்தம் அமைப்பதற்காக அங்குள்ள மன்னர் சரபோஜிக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் சீரழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் புகழ்பாடுவதற்காக நடத்தப்படவிருக்கும் அரைக்காசுக்குக் கூட பயனற்ற விழாவுக்காக அரசுக்கல்லூரியின் விளையாட்டுத் திடலை சீரழிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

விளையாட்டுத்திடலில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிமிட்டி கலந்த கிராவல் மண் கொட்டப்பட்டு அதன் பெரும்பகுதி கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்த பின்னர், லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் கூட மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடலை அதன் பழைய பொலிவுக்கு கொண்டு வருவது சாத்திய மற்றது.

விளையாடுத்திடல் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினாலும், அதை கண்டு கொள்ளாமல் திடலில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 23 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாக்களால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. மாறாக, ஏராளமான பாதிப்புகள் தான் ஏற்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்ற விழாக்களுக்கு பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர்.

பள்ளி நிர்வாகங்களை மிரட்டி அவற்றின் வாகனங்களை கட்டாயப்படுத்தி வாங்கி, பொதுமக்களை அழைத்து வர பயன்படுத்தினார்கள். உயிருடன் உள்ள தலைவர்களின் படத்துடன் கட்-அவுட்டுகள், பதாகைகள் வைக்கக்கூடாது என்று உயர்நீதி மன்றம் பிறபித்த ஆணையை மீறி திருச்சி மாநாட்டிற்காக ஆயிரக்கணக்கான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டன.

இப்படி சட்டத்தையும் மதிக்காமல், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் மதிக்காமல் எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு செயல்படுவது, அந்த அரசு அழிவை நோக்கி செல்வதையே காட்டுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை மதிக்காமல் கல்லூரிகளின் விளையாட்டுத் திடல்களை சீரழிப்பது, மாணவர்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.

எனவே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சீரழிக்கப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி விளையாட்டுத் திடலை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a comment