யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

313 0
யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்  2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு  7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது.
மானிப்பாய் – சங்குவேலியில் நேற்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியது. வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் ( வயது –  35), இராசதுரை ரவிசங்கர் ( வயது -40), ரவிசங்கர் பகீரதன் ( வயது -15) மற்றும் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ( வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்தநிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கி்ருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியது.
4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்த்துடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 ) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாகவுள்ள உணவகத்துக்குள் நேற்றிரவு 8.20 மணியளவில் புகுந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.
சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் ( வயது 27) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a comment