தனுஷ்கோடியில் சிக்கிய இலங்கைப் படகு குறித்து விசாரணை!

206 0

தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்கரையில் நின்ற இலங்கை பிளாஸ்டிக் படகை உளவுத்துறையினர் கைப்பற்றி, அதில் வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் திங்கள்கிழமை மீனவர்கள் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது, ஒத்ததாழை பகுதியில் இலங்கை படகு நிற்பதைக் கண்டனர்.

இது குறித்து மீனவர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் படகை சோதனையிட்டனர். அப்போது, அந்த படகு இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதும், அதில் மீன்பிடி வலைகள் இருந்ததும் தெரியவந்தது. படகில் இயந்திரம் இல்லை. இதனையடுத்து படகை காவல்துறையினர், கடலோரக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

படகில் யாரும் வந்தனரா என்பது குறித்து உளவுத்துறையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என, தமிழக ஊடகமான தினமணி செய்தி வௌியிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் யாரையும் கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என, மீனவர்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Leave a comment