‘நீட்’ தேர்வை திணிக்கவே பயிற்சி மையங்கள்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

240 0

தமிழகத்தின் மீது நீட் தேர்வு திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளும் செயல் என்பதுடன், மாணவர்களை ஏமாற்றும் செயல் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் இன்று தொடங்கப்படவுள்ளன. இது தமிழகத்தின் மீது நீட் தேர்வு திணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளும் செயல் என்பதுடன், மாணவர்களை ஏமாற்றும் செயலும் ஆகும்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா? என்ற வினாவுக்கு விடை காணப்பட வேண்டும்.

நீட் தேர்வை சாதாரண நுழைவுத் தேர்வு என்பதாக மட்டும் பார்க்கக் கூடாது. கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. பின்னர் தேவையே இல்லாமல் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. பொதுப் பட்டியலில் உள்ள எந்த ஒரு துறை குறித்த சீர்திருத்தமாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் கருத்தொற்றுமை அடிப்படையில் தான் முடிவெடுக்கப்பட வேண்டும்.

ஆனால், 2010-ஆம் ஆண்டில் தமிழக அரசிடம் கருத்துக் கேட்காமல் தான் அப்போதைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு நீட் தேர்வை திணித்தது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், அதன்பின் தயாரித்து அனுப்பப்பட்ட அவசர சட்டத்தையும் கொஞ்சமும் மதிக்காமல் காலில் போட்டு மிதித்தது இப்போதுள்ள பா.ஜ.க. அரசு.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மதிக்காமல் மத்திய அரசு ஆடிய ஆட்டத்தால் மாணவி அனிதாவின் உயிரையும், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவையும் இழந்தோம்.

இதுகுறித்த கவலை சிறிதும் இல்லாமல், நீட் தேர்வை முறியடிப்பதற்கான சட்டப்போராட்டத்தை நடத்தாமல், மத்திய அரசின் கட்டளைக்கு பணிந்து நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டது. தமிழக அரசின் இந்த முடிவு ஊரக, ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெருந்து ரோகம் ஆகும்.

நீட் தேர்வில் இழைக்கப்படும் துரோகம் ஒருபுறமிருக்க தமிழக அரசால் வழங்கப்படவிருக்கும் இலவச நீட் பயிற்சி மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத ஒன்றாகும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் இந்தத் திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்குகிறது. கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாக பாடம் நடத்துவது ஆகும்.

ஆனால், தமிழக அரசின் இலவச நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு பயிற்சி என்பது அப்படிப்பட்டதல்ல. இது விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் பயிற்சி ஆகும். தமிழ்நாடு முழுவதும் 412 இடங்களில் நீட் மற்றும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த அனைத்து மையங்களும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, அங்கு நடத்தப்படும் பாடங்கள் விடியோ கான்பரன்சிங் மூலம் 412 மையங்களுக்கும் ஒளிபரப்பப்படும் என்று பயிற்சி அளிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வகுப்பறை போன்ற கட்டமைப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் தான் மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அப்போது தான் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியும். வீடியோ கான்பரன்சிங் முறையில் இது சாத்திய மில்லை. இந்த முறையில் மாணவர்கள் ஆசிரியருடன் உரையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட 412 மையங்களின் மாணவ, மாணவியரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற முடியாது.

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 லட்சம் வரை கட்டணம் வசூலித்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாறாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனற்ற பயிற்சி அளிக்கப்படுவதால் இரு தரப்பினருக்கும் கல்வி இடைவெளி அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு அது கூட கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். தமிழக அரசு நினைத்தால் 412 மையங்களுக்கும் மொத்தம் 1000 ஆசிரியர்களை நியமித்து நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கலாம்.

அரசு பள்ளிகளில் உள்ள கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாகவே பயிற்சி வகுப்புகளை நடத்த முடியும். ஆனால், இவற்றையெல்லாம் செய்யாமல் விளம்பரத்திற்கு நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழ்நாட்டு மக்களையும், மாணவர் களையும் தமிழக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும். அதற்கான சட்டப்போராட்டம் இன்னும் முடியாத நிலையில், அதை முழுவீச்சில் தமிழக அரசு நடத்த வேண்டும். இடைக்கால ஏற்பாடாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக இருந்தால், நன்றாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சியளிக்க அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Leave a comment