கமல் நிலைப்பாடு தி.மு.க., காங்கிரசை பாதிக்குமா?: திருநாவுக்கரசர்

278 0

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு தி.மு.க. மற்றும் காங்கிரசை பாதிக்குமா? என்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

இதையொட்டி கேரளா, டெல்லி, மேற்கு வங்காள முதல்-மந்திரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமலின் வருகை தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கும் சவாலாக வரலாம் என்று பேசப்படுகிறது.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கமல் அரசியலுக்கு வரப் போவதாகத்தான் அறிவித்து இருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

கமல் தனது அரசியல் பயணத்தின் முன்னோட்டமாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார். இப்போது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் சந்தித்து இருக்கிறார். இன்னும் யார்- யாரை பார்க்கப் போகிறார் என்பது தெரியாது.முதலில் கட்சி தொடங்குவது பற்றி முடிவெடுத்து அறிவிக்கட்டும். கட்சி தொடங்கி பெயர் வைத்து, தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்ய வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இன்னும் பெயரே வைக்காத கட்சியை பற்றி இப்போது என்ன சொல்ல முடியும்?

இப்போது அவர் கட்சி தொடங்குவதால் தாக்கம் ஏற்படுமா? என்றெல்லாம் ஆரூடம் சொல்ல முடியாது.

அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டும். யாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்? யாருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்? யாரோடு சேரப் போகிறார்? தனித்து நிற்கப் போகிறாரா? என்பதற்கெல்லாம் விடை தெரிந்தால்தான் எதுவும் சொல்ல முடியும்.

கட்சி தொடங்கி கொள்கைகளை வெளியிட வேண்டும். மக்கள் ஆதரவை பெற வேண்டும். நாட்டில் இப்போது நிலவும் குழப்பத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரப் போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கமல் இரண்டு தேர்தல்களையும் சந்திப்பாரா? இல்லை சட்டமன்ற தேர்தலை மட்டுமே சந்திப்பாரா? என்பதெல்லாம் தெளிவாகட்டும். இப்போது கண்ணை கட்டிக் கொண்டு எதையும் யூகிப்பது சரியாக இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment