யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி

415 0

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையினுள் உணவுப் பொதியினுள் கஞ்சாவை கொண்டு செல்ல முயன்ற வன்னிப் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை பிணையில் விடுவிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிரதீபன், குறித்த இளைஞருக்கு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் றஜிந்தன் என்பவரே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது மனைவியிடமிருந்து உணவுப் பொதியை பெற்று வந்து தருமாறு கேட்டுக் கொண்டதாகவும் அந்த உணவுப் பொதியினுள் கஞ்சா இருப்பது தெரியாமல் கொண்டு வந்த போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் கையடக்க தொலைபேசிகளை பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் பல கைதிகள் கையடக்க தொலைபேசிகளை பாவிப்பதாகவும் வாள்வெட்டு.சந்தேகநபர்களுடைய முகநூல்கள் பல இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அர்ப்பணிப்பான நேர்மையான பல அதிகாரிகள் கடமையாற்றினாலும் இதற்கு ஒரு சில சிறைச்சாலை அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment