யாழ்ப்பாண மேல் நீதிமன்றின் கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக அமைகிறது. அதனால் அது தொடர்பில் ஆராயப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, ஆஸ்திரேலியாவில் கல்வியைத் தொடர வெளிநாடு செல்லும் விடுப்பைக் கோரியிருந்தார்.
எனினும் அவரது விண்ணப்பத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்க முன்தாகவே ஜெகூ ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்.
இதனால் ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஜெகூ மீள கடமைக்கு அழைக்கப்பட்டார். அத்துடன் ஓழுக்காற்று நடவடிக்கைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் தனது வெளிநாடு செல்லும் விண்ணப்பத்துக்கு விடுப்பை வழங்க கட்டளையிடுமாறும் கோரி, ஜேகூ யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் உறுதிகேள் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணையின் பின்னர் மனுவில் அவர் கோரிய அனுகூலங்களை மேல்நீதிமன்று நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்றுமுன்தினம் வழங்கினார்.
“மாகாண மேல் நீதிமன்றின் கட்டளைக்கு மாகாண ஆளுநர் கட்டுப்படவேண்டிய அதிகாரியில்லை. அவர் கொழும்பு அரசின் பிரதிநிதி. மாகாண அதிகாரி ஒருவருக்கு வெளிநாடு செல்லும் அனுமதியை வழங்கும் உயர் அதிகாரம் கொண்டவர் மாகாண ஆளுநர் மட்டுமே” என்று அரச சட்டவாதி வாதாடியிருந்தார்.