புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – 10ஆம் கட்டை பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முந்தல் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இன்மை காரணமாக 8 பேர் சிலாபம் மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களின் மூன்று பேரது நிலமை தொடர்ந்தும் கவலைக்கிடமானதாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் மேலதிக சிகிச்கைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பேருந்தின் சாரதி முந்தல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் பேருந்து கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பலியானவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.