தப்பி ஓடிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்களை பெல்ஜியம் கோர்ட்டு விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெயினில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா மாகாணம் சுதந்திரம் கேட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தியது. அதில் வெற்றி பெற்றதாக அறிவித்து தனிநாடு என அறிவிக்கப்பட்டது. அதை ஏற்காத ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜேஸ் கேட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து அதை ஸ்பெயினின் நேரடி மேற்பார்வையில் கொண்டு வந்தார்.
அதைதொடர்ந்து கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்கள் பெல்ஜியத்திற்கு தப்பி ஓடிவிட்டனர். எனவே அவர்களை கொண்டுவர ஐரோப்பிய யூனியன் கைது வாரண்டு பிறப்பித்தது.
இதை விசாரித்த பெல்ஜியம் கோர்ட்டு கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமாண்ட் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்களை ஜாமீனில் விடுவித்தது. மேலும் அமைச்சர்களை உடனடியாக ஸ்பெயினுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்றும், 15 நாட்களில் பெல்ஜியம் கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டது.