மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தர்(காணொளி)

2368 201

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் சடலம் இன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மகிலூரைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் களுவாஞ்சிகுடி  நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மரணமடைந்தவரின் உறவினர்களினால் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வான் குறித்த சடலத்தினை தோண்டி எடுத்து விசேட பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் எருவில் மயானத்திலிருந்து உயிரிழந்தவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு களுவாஞ்சிகுடி பொலிசார் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மகிழுர் முனையில் உள்ள குறுக்கு வீதியில் மின்சார தூண் ஒன்றில் மோதிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பதிவுசெய்யப்பட்டமுறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment