எனது மகன் கொல்லப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது; நீதி கிடைக்குமென நான் நினைக்கவில்லை!

263 0

கடந்த வருடம் இதேநாளில் ( ஒக்ரோபர் 20) சுட்டுக்கொல்லப்பட்ட மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆனால் நீதி கிடைக்கும் என்பதில் துளியும் நம்பிக்கையில்லை என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராசா கஜனின் தாய் நடராசா சறோஜினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் வசிக்கும் நடராசா சறோஜினியின் நாளைய(21) தினம் தனது மகனின் ஓராண்டு நினைவு நிகழ்வை நடத்துவதற்கு தன்னால் முடிந்த ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தாா்
அவா் மேலும் குறிப்பிடுகையில்

இன்று(20) தனது மகன் சுட்டுக்கொல்லப்பட்டு ஒராண்டு ஆனால் இந்த ஒரு ஆண்டுக்குள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மகன் இறந்த போது வந்தவர்கள் எமக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினார்கள். ஆனால் இன்று எல்லோரும் எங்களை மறந்து விட்டார்கள். எனது மகனை மிகவும் கஸ்ரத்திற்குள் மத்தியில் படிப்பித்தேன் ஒரு மகன் பல்கலைகழகத்தில் படிக்கிறான், பட்டத்தோடு வருவான் என்றிருந்தேனே தவிர பாடையில் வருவான் என நினைத்தும் பார்க்கவில்லை. எனக் குறிப்பிட்ட அவர்,

நடந்தது நடந்துவிட்டது இனி நீதி வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பிலும் இப்பொழுது நம்பிக்கையற்று போய்விட்டது. மகன் கொல்லப்பட்ட போது அரசியல்வாதிகள் பலர் வந்தார்கள் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். வீடு கட்டி தரலாம், ஏனைய பிள்ளைகளுக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தரலாம், நட்டஈடு தரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். எங்களுக்கும் அதுவொரு சிறு ஆறுதலாக இருந்தது. ஆனால் எல்லாமே வெறும் வாக்குறுதிகள் என்பதை இந்த ஒரு வருடத்திற்குள் புரிந்துகொண்டேன். என்னோடு தற்போது இருக்கின்ற மூன்று பிள்ளைகளும் க.பொ.த.உயர்தரம் படித்தவர்கள் நிரந்தர வேலையின்றி உள்ளனர்.

மேலும் வீடு அமைத்து தரலாம் என்று சொன்னார்கள் அது நடக்காத போது தற்போது நான் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் எல்லோருக்கும் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தை பெற்றுள்ளேன். எட்டு இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் அதனை முழுமையாக கட்டி முடிப்பதற்கு முடியாமல் பெரும் சிரமப்படுகின்றேன். எனத் தெரிவித்த அவர் நேற்றைய தினம்(19) கிராம அலுவலருடன் கச்சேரியிலிருந்து வந்தவர்கள் எங்களுக்கு 12 இலட்சம் ரூபாவில் வீடு அமைத்து தருவதாக சொல்லி சென்றுகின்றார்கள். எனவும் குறிப்பிட்டார்.

மகன் கொல்லப்பட்ட போது மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் காணப்பட்ட கொதி நிலையை தணிப்பதற்காகவே எங்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார்கள் என்றே நினைக்கிறேன். எங்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் சம்மந்தன் ஜயாவையும்,சேனாதிராஜா ஜயாவையும் அழைத்து வந்தார் அவர்களும் எங்களுக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் நட்டஈட்டை பெற்றுத் தருவதாகவும் சொன்னார்கள். மீள்குடியேற்ற அமைச்சர் வீடு கட்டித்தரலாம் என்றார் ஏனைய பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரலாம் என்றார் ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை எனத் கவலையோடு தெரிவித்த சறோஜினி பிள்ளையும் போய் எல்லாமும் போய் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறோம் என்றார்.

Leave a comment