எஜமானரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த நாய் – யாழ் கள்ளியங்காட்டில் சம்பவம்

362 0

Kallizalakdu 1எஜமானரின் உயிரைக் காப்பாற்றவதற்காக எட்டு அடி நீள ராஜநாகத்துடன் போராடி, தன்னுயிரை நீத்த நாய் ஒன்று கல்வியங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டரங்கு ஒழுங்கை ஜி.பி.எஸ் வீதி, கல்வியங்காடு எனும் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செல்வரட்ணம் பிரசாந்த் என்பவர் அல்சேசன் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். பிரஸ்தாப நாய் தினந்தோறும் அவருடனே அருகிலிருந்து சாப்பிடுவதும் உறங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று குறித்த வீட்டின் பின் வளவுக்குள் ராஜநாகம் ஒன்று பிரவேசித்துள்ளது. நாகம் வந்திருப்பதனை அவதானித்த நாய், எஜமான் முன் குரைத்து அவரை விழிப்படையச் செய்துள்ளது. நாயின் அடையாளப்படுத்தலுடன் வீட்டின் பின்பகுதிக்குள் சென்ற போது அங்கு மூலையில் ஏதோ வொன்று மறைந்துள்ளதை அவதானித்த நபர் அது என்னவென கண்டறிய தடியை அங்கு நீட்டியுள்ளார்.

Kallizalakdu 2

அப்போது வெகுண்டெழுந்த சுமார் எட்டு அடி நீளமான ராஜநாகம் அவரைத் தீண்ட முயன்றது. உடனே விரைந்து செயற்பட்ட நாய் ராஜநாகத்தை தன்வாயால் இறுக கெளவியபடி அவ்விடத்தை விட்டு விரைவாக சென்று எஜமானின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. நாய்க்கும் ராஜநாகத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நாகத்தின் விஷ­ப்பல் தாக்கி காலில் காயமடைந்த நாய் உடனடியாக சிகிச்சைக்காக மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.00 மணியளவில் நாய் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

நாயுடனான மோதலில் பலவீனமடைந்த ராஜநாகம் அயலவர்களின் உதவியுடன் வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டு இரும்புக்கூட்டில் அடைக்கப்பட்டது. பிடிபட்ட ராஜநாகத்தையும் உயிரிழந்த அல்சேசன் நாயையும் அப்பகுதி மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Kallizalakdu 3