தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாட என்ன செய்ய வேண்டும்? – தீயணைப்புத் துறையின் அறிவுரைகள்

2172 0

தீ விபத்து மற்றும் பட்டாசு விபத்துகள் இல்லாமல் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடும்படி பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை அறிவுரைகள் வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபஒளித் திருநாளான தீபாவளி இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இத்தீபாவளித் திருநாளினை தீ விபத்தில்லா திருநாளாக கொண்டாட இத்துறை கீழ்காண் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பட்டாசு மற்றும் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் பள்ளிகள், பொதுஇடங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற இடங்களில் தீத்தடுப்புக் குழுக்கள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது. பிரசுரங்கள், போஸ்டர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பிரதிபலிக்கும் நேரத்தினை குறைத்து உடனுக்குடன் தீவிபத்துக்களை அணைக்கும் நோக்கில், சென்னை மாநகரில் தீவிபத்து ஏற்படக்கூடிய 34 இடங்கள் கண்டறியப்பட்டு ஒரு நீர்தாங்கி வண்டி குழுவினருடன், குடிநீர்வாரிய தண்ணீர் லாரியும் 16.10.2017 முதல் 24 மணிநேரமும் நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேற்காண் ஏற்பாட்டுடன் சென்னை மாநகரில் உள்ள 38 தீயணைப்பு நிலையங்களிலும் பணியாளர்கள் ஊர்திகளுடன் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து தீயணைப்பு ஊர்திகளும் வான்தந்தி வாயிலாக கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இத்தீபாவளித் திருநாளினை விபத்தில்லா திருநாளாக கொண்டாட பொதுமக்கள் செய்யக்கூடியவை / செய்யக்கூடாதவை என்ன என்பதை பார்ப்போம்.

பட்டாசுகளை முறையாக தீ உரிமம் பெற்ற கடைகளிலேயே வாங்க வேண்டும். பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் பட்டாசு வெடிக்கும்பொழுது இறுக்கமான பருத்தி ஆடையை அணியவேண்டும். பாதுகாப்பிற்காக காலணி மற்றும் கண்ணாடி அணியவேண்டும்.

பட்டாசு வெடிக்கும் பொழுது ஒருவாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பக்கத்தில் பாதுகாப்பிற்கு இருக்கட்டும். பட்டாசு பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும் ராக்கெட்டுகள் பற்றவைக்கும் பொழுது ஜன்னல் அல்லது கதவு போன்ற எந்தவொரு தொடக்கத்தையும் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ போட வேண்டும். நீண்ட ஊதுவர்த்திகளை கொண்டு பட்டாசுகளை வெடியுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது முகத்தினை தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். ஆடையில் தீப்பற்றினால், ஓடாதீர்கள், உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள், நின்று கீழே படுத்து உருளுங்கள். பட்டாசு வெடிக்கும் பொழுது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் விலங்குகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் சிறுவர்களை பட்டாசு மற்றும் மத்தாப்புக்களை கொளுத்த அனுமதிக்காதீர்கள். ஒருபோதும் வெடிக்காத பட்டாசு மற்றும் மத்தாப்புகளை மீண்டும் வெடிக்காதீர்கள் வீட்டிற்கு அல்லது கட்டிடங்களுக்கு மிக அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். பட்டாசுகள், ராக்கெட்டுகள், பூச்சட்டிகள் (புஸ்வானம்) ஆடம்பாம் போன்றவைகளை கைகளில் வைத்து வெடிக்காதீர்கள். பட்டாசுகளை காலை 06.00 மணிக்கு முன்னரும், இரவு 10.00 மணிக்கு பின்னரும் வெடிக்காதீர்கள்.

பட்டாசு மற்றும் வெடிகளை வெடிக்க தீக்குச்சிகளை பயன்படுத்தாதீர்கள். தீக்காயத்தில் ஒட்டியுள்ள ஆடையினை அகற்றாதீர்கள். தீக்காயத்தின் மீது எண்ணெய் மற்றும் இங்க் போன்றவற்றினை கொட்டவேண்டாம். பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகிலோ, முன்னரோ பட்டாசு வெடிக்கக்கூடாது பெட்ரோல் பங்குகளுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள் பட்டாசுகளை கூட்டம் நிறைந்த தெருக்கள் மற்றும் சாலைகளில் வெடிக்காதீர்கள். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment