தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

4210 111

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நேற்று முன்தினம் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திண்டிவனத்தில் 12 செ.மீ. மழை பதிவானது. இந்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று(திங்கட் கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பும் இருக் கிறது.

மேலும், மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு பகுதியில் நகர்ந்து தெற்கு ஒடிசா மற்றும் வட ஆந்திரா கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை இருக் காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a comment