எதிர்வரும் 13 ஆம் திகதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

242 0

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 13 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கான அழைப்பு இன்று (10) உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு, தற்போது உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளினதும் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும், மற்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானமெடுத்து உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (09) மாலை யாழில் ஒன்றுகூடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் அடிப்படையில் ஏகமனதாக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment