எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட டி.ஜி.பி.யை அரசு பயன்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

220 0

எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட டி.ஜி.பி.யை அரசு பயன்படுத்துகிறது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள், கடந்த ஆறு ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், ஒருசில காவல்துறை அதிகாரிகளால் சீரழிந்து நிற்கிறது. ஒரு போலீஸ் அதிகாரியை “சட்டம் ஒழுங்கு” டி.ஜி.பி. பதவிக்குப் பொறுப்பு அதிகாரியாக இரு வருடங்கள் நியமித்து, பிறகு அவர் ஓய்வுபெறும் நேரத்தில் இரு வருடங்கள் ‘பணி நீட்டிப்பு’ அளித்து, தேர்தல் முறைகேடுகளுக்கும், எதிர்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடவும் மட்டுமே டி.ஜி.பி.களை பயன்படுத்தும் கேடுகெட்ட நிர்வாகத்தை அதிமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

பணிப்பாதுகாப்புப் பெறும் டி.ஜி.பி.கள் அரசின் தலையாட்டி பொம்மைகளாக மாறி, பதவியைக் காப்பாற்றிக் கொள்ளக் காவல்துறையின் சுதந்திரத்தை அதிமுகவிற்கு தாரைவார்த்து விட்டார்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வருமான வரித்துறையால் ‘குட்கா மாமூல்’ புகார் சாட்டப்பட்ட ஒருவரை, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமித்து, எதிர்கட்சிகளின் மீது பொய் வழக்குகள் போடவும், பொதுமக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடவும், காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பண விநியோகம் செய்த விவகாரத்தில், தேர்தல் ஆணையமே உத்தரவிட்டும் இதுநாள் வரை அமைச்சர்கள் மீதோ, முதல்-அமைச்சர் மீதோ வழக்குப் பதிவு செய்ய முடியாத ஒரு தலைமை, தமிழக காவல்துறைக்குக் கிடைத்திருப்பது கவலைக்குரியது.

இது ஒருபுறமிருக்க, டி.ஜி.பி.யே உளவுத்துறைக்கும் ‘பொறுப்பு டி.ஜி.பி.யாக’ இருக்கிறார். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாளுவதில் தோல்வியடையும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் குறித்து, ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளால் டி.ஜி.பி.யிடம் கூறிட முடியவில்லை. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உளவுத் துறையால் ஏதும் செய்ய முடியாமல், ‘அரசியல் பணிகளை’ மட்டும் செய்யும் நிலைக்கு உளவுத்துறை தள்ளப்பட்டுள்ளது.

இப்படியொரு வரலாறு காணாத சீரழிவைத் தமிழக காவல்துறை சந்தித்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, எண்ணற்ற நேர்மையான டி.ஜி.பி.க்கள் இருந்தும் திறமையற்ற தலைமையின் கீழ் தமிழக காவல்துறை இன்றைக்கு நிலைகுலைந்து நிற்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அத்துமீறிய தலையீடுகளால் காவல்துறை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, காவல்துறை நிர்வாகத்தின் சீரழிவை தடுத்து நிறுத்த, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ன் கீழ் அமைக்கப்படவேண்டிய, ‘மாநில பாதுகாப்பு ஆணை யம்’ இப்போது மிகவும் அவசியமாகிறது.

இந்த ஆணையத்தின் அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதால், தமிழக காவல் துறையின் செயல்பாடுகள் பற்றிய ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுக்க முடியும். ஆகவே, நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தது போல், தமிழக காவல் துறைக்கு ‘கொள்கை வழிகாட்டுதல்களை’ உருவாக்க, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான ‘மாநில பாதுகாப்பு ஆணையத்தை’ தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment