அர்ஜுன் அலோஸியஸ், கோப் குழுவுக்கு வழங்கிய தகவல்கள் தவறானவை – கசுன் பலிசேன

5434 0

பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ், கோப் குழுவுக்கு வழங்கிய தகவல்கள் தவறானவை என நிறுவன மேலாளர் கசுன் பலிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.

முறி விற்பனை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போது அவர் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அரச தரப்பு சட்டத்தரணிகள் அர்ஜூன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், சாட்சியங்களை அழித்து ஆணைக்குழுவை திசைதிருப்ப முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பெர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கசுன் பலிசேனவின் தொலைபேசி தகவல்களில் ‘லிட்டில் ஜொனி’ என்ற பெயர் கொண்ட தொலைபேசி அழைப்பொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த பெயரைக் கொண்டவர் சிறிய அளவிலான முறி நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களால் அறியப்படுபவர் என கசுன் பலிசேன தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் அர்ஜூன் அலோஷயசிடம் இருந்து சன்மானங்களை பெறுகின்றவர்களை அடையாளப்படுத்துவராக செயல்பட்டுள்ளதாக அரசு தரப்பு சட்டதரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதியம், தேசிய சேமிப்பு வங்கி, மத்திய வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் பணியாற்றுகின்றவர்களுக்கு அர்ஜூன் அலோஸியஸ் பல மில்லியன்களை வழங்கியுள்ளதாகவும் சட்டதரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முறி விற்பனையின் மூலம் பெறப்பட்ட வருவாய் பெப்பச்சுவர் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் மற்றும் டபிள்யூ.எம். மெண்டிஸ் எனப்படும் மதுபான நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளது.

அத்துடன், அவற்றின் ஊடாக முறி விற்பனையுடன் தொடர்புடைய குறித்த அதிகாரிகளுக்கு சன்மானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Leave a comment