இலங்கையில் கடும் மழை

393 0

நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கைக்கு கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் காணப்படுவதால் எதிர்வரும் சில நாட்களுக்கு சீரற்ற நிலைமை தொடரும் என்றும் அதன் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியமையால், களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கட்டிட ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மண்மேடு சரிந்து விழுதல், நிலச் சரிவு, நிலத்தாழிறக்கம் மற்றும் கற்கள் சரிந்து செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இரத்தினபுரி நகரை அண்டிய சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

முத்துவ, பலிகத்கொட மற்றும் கெடன்கம பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனரத்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது

இரத்தினபுரி நகருக்குள் பிரவேசிக்கும் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இரத்தினபுரியின் அயகம பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 220 குடும்பங்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்க மூன்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட வேளைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நீரில் பயணிக்கக் கூடிய யுத்த 15 தாங்கிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர கடற்படைக்கு சொந்தமான 13 மீட்புப் படகுகள் மீட்புப் பணிகளுக்காக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment