சரத் பொன்சேகாவின் கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு

260 0
இறுதிகட்ட போரின்போதும் அதற்குப் பின்னரும் இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றினுடாக இந்த அறிவிப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் போர் வீரர்கள் என்றும் இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது.
அத்துடன், முன்னாள் படையினருக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகளை கௌரவமாக வழங்குவதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை மற்றும் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பிரேஸிலுக்கான தூதுவராக நியமித்தமை முதலானவற்றை இதற்கு உதாரணமாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், எட்டு ஆண்டுகளின் பின்னர் போர்க்குற்றங்கள் உறுதிப்படுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகத் ஜயசூரிய போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அது குறித்த உரிய விசாரணைகள் இடம்பெறுமாயின் ஆதாரங்களை வெளியிட தாம் தயார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி, போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஏனைய அதிகாரிகள் குறித்து தம்மிடம் தகவல் உள்ளதாகவும் பொன்சேகா கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மனித உரிமைகள் பேரவை என்பன இந்தக் குற்றவாளிகளை சர்வதேசத்துக்கு முன்னாள் கொண்டுவந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
அத்துடன், இந்தச் சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் சபை தவற விடக் கூடாது என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment