பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கொடைக்கானலில் நடந்த இரோம் சர்மிளா திருமணம்

223 0

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று இரோம் சர்மிளா திருமணம் நடைபெற்றது.

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்துக்கு எதிராக போராடியவர் இரோம் சர்மிளா. அதன் பிறகு தனது போராட்டத்தை கைவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் தோல்வியடையவே பொது வாழ்வில் இருந்து விடுபடப்போவதாக கூறி பல்வேறு ஊர்களுக்கு சென்றார்.

கடந்த 3 மாதமாக கொடைக்கானலில் தங்கியுள்ளார். அவருடன் லண்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவரும் உள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இவர்களது திருமணத்தை கொடைக்கானலில் நடத்தக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனி நபர் திருமண சட்டத்தின் கீழ் உரிய விளக்கம் அளிக்க மறுத்ததால் அனைத்து ஆட்சேபனை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து இரோம் சர்மிளா திருமணம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.

இன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொள்ள வந்தனர். பின்னர் இருவரும் சார்பதிவாளர் முன்பு ஆஜராகி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அவரது நண்பர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இரோம் சர்மிளா திருமணத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

Leave a comment