ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை எதிர்த்திடுவோம் – மே பதினேழு இயக்கம்

283 0

ரேசன் கடைகளை மூடப் போகிறார்கள் என்று 2016 ஏப்ரல் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து சொன்னோம்.மே மாதம் 4 ஆம் தேதி மீண்டும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம்.WTO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை எதிர்த்து மே 6,2016 அன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறக் கோரி தோழமை அமைப்புகளையும் அழைத்து மே 7,2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.ரேசன் கடைகள் மூடும் ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தி சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை பிரச்சாரங்கள் மேற்கொண்டோம்.மூடப்படும் ரேசன் கடைகள் என்ற பெயரில் WTO ஒப்பந்தத்தினைப் பற்றி விளக்கும் புத்தகத்தினைக் கொண்டு வந்தோம்.

அது குறித்த கருத்தரங்கினை சென்னை, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் நடத்தினோம்.ஊடக விவாதங்களில் இதைப் பற்றி பாஜக-வினரிடம் கேள்வி கேட்டோம்.ரேசன் கடைகளை மூடுவதை எதிர்த்து பல தெருமுனை விளக்கக் கூட்டங்கள் நடத்தினோம்.

மே பதினேழு இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் காணொளி பெருமளவில் சமூக வலைதளங்களில் பரவி, இது விவாதப் பொருளாக்கப்பட்ட போது மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அப்படி எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என பொய் சொன்னார். அவருக்கான விரிவான ஆவணங்களுடன் மறுப்பு அறிக்கையை அனுப்பி, அனைத்து ஊடகங்களிடமும் நேரில் சென்று கொடுத்தோம். ஆனால் மே பதினேழு இயக்கத்தைப் பற்றி நிர்மலா சீத்தாராமனின் பொய்யை வெளியிட்ட ஊடகங்களுக்கு உண்மையை வெளியிட மனமில்லை.

தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் “Direct Benefit Transfer” என்று சொல்லக் கூடிய மானியத்தை நேரடியாக பெறுவதற்கான படிவத்தை மக்களிடம் என்னவென்றே சொல்லாமல் விநியோகித்து கையெழுத்து பெற்றதை அம்பலப்படுத்தி விவாதமாக்கினோம்.இது இந்த நாட்டின் உழைக்கும் ஏழை, எளிய மக்களை நசுக்கப் போகும் மிக முக்கியமான பிரச்சினை, அதனால் இதனை அனைத்து கட்சிகளும் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தோம். இதனை பேசாமல் இருப்பது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்று வலியுறுத்தினோம்.இந்த ஆண்டு(2017) உழைப்பாளர் தினமான மே 1 அன்று “ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு” என்ற பெயரில் பொதுக்கூட்டத்தினை சென்னையில் நடத்தினோம். இந்த கூட்டத்திற்கான பிரச்சாரத்தில் சென்னை முழுதும் 1 லட்சம் மக்களை நேரில் சந்தித்து மே பதினேழு இயக்கத் தோழர்கள்: பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மே பதினேழு இயக்கத்தின் அனைத்து போராட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் இதனை தொடர்ந்து சொல்லி வந்தோம்.
இன்று ரேசன் கடைகளை மூடும் மத்திய அரசின் அறிவிப்புகளை அரசிதழிலேயே வெளியிட்டிருக்கிறார்கள்.பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் சிறப்பு சலுகை பெற்றிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு இது பொருந்தாது என்றும், மாநில நிதியைப் பயன்படுத்தி தொடர்ந்து வழங்குவோம் என்றும் மற்றொரு பொய்யை சொல்லியிருக்கிறார்.Food corporation India வில் உணவுக் கொள்முதல் நிறுத்தப்படும் போது எங்கிருந்து மாநில அரசு கொடுக்கப் போகிறது?

ஏற்கனவே GST-ன் வாயிலாக மாநில அரசின் வருமானம் மத்திய அரசினால் பிடுங்கப்பட்டு விட்டது. மக்கள் நல திட்டங்களுக்கே மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு மாநில அரசை டெல்லி அரசாங்கம் தள்ளியிருக்கிறது. அப்படியிருக்க மாநில அரசு சொந்த நிதியில் தொடர்ந்து வழங்கிக் கொண்டேயிருக்கும் என சொல்வது எத்தனை பெரிய பொய்!தமிழ்நாடு இறுதி வரை எதிர்த்த உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு, எந்த காரணமும் சொல்லாமல் எதற்காக அனுமதி வழங்கப்பட்டது என்ற காரணத்தையும் இன்று வரை இவர்கள் சொல்லவில்லை.

நீட் தேர்வு தமிழகத்திற்கு கிடையாது என்று கொடுத்த வாக்குறுதியே தூக்கி வீசப்பட்டு, இப்போது ஒரு வருடத்திற்காவது விலக்கு கொடுங்கள் என்று கெஞ்சி பாசாங்கு காட்டிக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் எடுபிடி அரசு.அரசிதழில் வெளியிடப்பட்டாலும், பொருட்கள் நிறுத்தப்படாதென்று இந்த அரசு சொல்வதையா நாம் நம்புவது.

பாஜகவின் எடுபிடியாக மாறிவிட்ட தமிழ்நாடு அரசு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது.உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்திலிருந்து (TFA) இந்தியா வெளியேறுவது ஒன்றே ரேசன் கடைகளை காப்பாற்றி மக்களைப் பாதுகாக்கும்.TFA என்பது வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்த வரியினில் கட்டற்ற இறக்குமதியினை இந்தியா முழுமைக்கும் செய்வதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திற்காகத்தான் GST கொண்டுவரப்பட்டு, சிறு,குறு தொழில்களின் கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறது.

ரேசன் கடைகளை மூடுவதன் பின்னுள்ள உலக வர்த்தக்க் கழகத்தின் சதியையும், அதற்கு தரகர் வேலை பார்க்கும் இந்திய ஒன்றிய அரசின் சதியையும் அம்பலப்படுத்துவோம்.இந்திய அரசே! உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு.ஏழை, எளிய உழைக்கும் மக்களின் சோற்றில் மண் அள்ளிப் போடாதே!

Leave a comment