மும்பை கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு, சிவசேனா தலைவர் கைது

23671 0

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து நேற்று விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான கட்டிடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட தேசிய மீட்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று வரை 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கீழ் தளத்தில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் புரனமைப்பு பணிகள் நடைபெற்றதில் கட்டிடம் பலவீனம் அடைந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய அந்த நர்சிங் ஹோம் சிவசேனா தலைவர் சுனில் சிதபுக்கு சொந்தமானது. இச்சம்பவம் தொடர்பாக அவர்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்றிரவு அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், இரவு முழுவதும் தொடரப்பட்ட மீட்பு பணிகளில் மேலும் 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு பணியில் நிலவரம் குறித்து பேரிடர் மீட்புக்குழு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்தகவலின்படி, மீட்புப்பணியில் இதுவரை 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் இறந்துவிட்டனர். காயமடைந்த மற்ற 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலுள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பாதிப்படைந்தவர்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
நேற்றிரவு விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ,’விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கார்பரேஷென் கமிசனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’, என கூறினார்.

Leave a comment