லாரிகளில் வழங்கும் குடிதண்ணீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

344 0

லாரிகளில் வழங்கும் குடிதண்ணீர் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மாதக்கணக்கில் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. ஒருசில பகுதிகளில் குழாய்களில் வரும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், கல் குவாரிகளை தேடி அலையும் அவல நிலையை இந்த அ.தி.மு.க அரசு ஏற்படுத்தி விட்டது.

தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வடசென்னை பகுதியிலும், நெம்மேலியில் துவங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தென் சென்னை பகுதியிலும், குடிநீர் பிரச்னையை தீர்க்க ஓரளவு கை கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் கடந்த ஆறு ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, 16.4.2013 அன்று நெம்மேலியில் 1371 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், சென்னை அருகில் உள்ள போரூரில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த இரு திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநில அரசுடன் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரையும் பெறமுடியவில்லை.

சென்னை மாநகருக்கு குடிநீர் தரும் ஏரிகளை ஆழப் படுத்தி, மழை வெள்ளத்தில் கடலில் கலந்த வெள்ளநீரை சேமித்து வைக்கவும் இந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்கு பார்த்தாலும் டெங்கு போன்ற நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் சென்னை மாநகர மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் குதிரை மொழி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி ஆழந்தலை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய இரு திட்டங்களுக்காகவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் செலவழிக்கப்படாமல் சரண்டர் செய்யப்பட்டுள்ளது”, என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த இரு திட்டங்களும் 10.4.2013 அன்று 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.

ஆகவே, சென்னை மாநகரத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் ’குதிரை பேர’ அதிமுக அரசுக்கு எவ்வித ஆர்வமோ, ஆக்கபூர்வமான முயற்சியோ இல்லை. அதைவிட, “110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன”, என்று முதலமைச்சர் அப்பட்டமான பொய்யை சட்டமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.

எனவே, இனியும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்காமல், உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு லாரிகளில் வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment