முதுகெலும்பு இல்லாத கமல் எப்படி முதல்வர் ஆக முடியும்: எச்.ராஜா கடும் தாக்கு

1209 0

முதுகெலும்பு இல்லாத நடிகர் கமல்ஹாசன் ஒருபோதும் முதல்-அமைச்சர் ஆக முடியாது என சேலத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியுள்ளார்.

ஆடிட்டர் ரமேஷ் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று சேலத்தில் கடைபிடிக்கப்பட்டது. மரவனேரில் உள்ள அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்ட உருவ படத்திற்கு பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆடிட்டர் ரமேஷ் இறந்து 4 ஆண்டுகள் ஆகியும், வழக்கு விசாரணை கூட இன்னும் நடைபெறாதது துரதிர்ஷ்டமானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதேபோல் வேலூர், ஆம்பூர், பரமக்குடி, கோவை பகுதிகளில் உள்ள இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க எந்தவித முன்னேற்றமும் இல்லை. இது அரசின் நிர்வாக திறமை இல்லாதது போல் தோன்றுகிறது. இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மூத்த தலைவர் அத்வானி கோவைக்கு வந்தபோது திட்டமிட்டு குண்டு வீச்சு சம்பவ வழக்கில் இதுவரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

பல வழக்குகளில் நீதிபதிகளை மிரட்டும் சூழ்நிலை இருந்து வருகிறது. யார்? குற்றம் செய்தாலும் அக்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது அவருடைய பணத்திமிரை காட்டுகிறது. மன்னார்குடி குடும்பம் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து வருகிறார்.

அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. விஸ்வரூபம் படம் வெளியிடும்போது பல அமைப்புகள் போராட்டம் நடத்தியதற்கு அவர் நாட்டை விட்டே செல்கிறேன் என்று கூறினார். இதற்கே இப்படி செல்கிறார் என்றால் இவர் முதல்-அமைச்சரானால் வெளிநாட்டுக்கே சென்று விடுவார். தமிழ்நாட்டின் கதி என்ன?முதுகெலும்பு இல்லாத இவர் ஒருபோதும் முதல்-அமைச்சர் ஆக முடியாது.
இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Leave a comment