நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 14 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட தொடங்கின

432 0

சுவாதி கொலை நடந்த சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 14 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு செயல்பட தொடங்கின.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க ரெயில் நிலையத்துக்கு எதிரே உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு தான் முக்கிய பங்கு வகித்தது. அதே சமயம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாதது விமர்சனத்துக்கு உள்ளானது.

இதையடுத்து பயணிகள் அதிகம் கூடும் ரெயில் நிலையங்கள் மற்றும் பதற்றமான ரெயில் நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.எனினும் சுவாதி கொலை நடந்து ஓராண்டு ஆகியும் இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பொருத்தப்படவில்லை என மீண்டும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 14 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்தது. கேமரா பதிவுகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தயாரானது. இதில் 4 பக்கமும் சுழன்று ‘பிளாஷ்’ வெளிச்சத்துடன் புகைப்படம் எடுக்கக்கூடிய ஒரு கேமரா ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே பொருத்தப்பட்டு இருக்கிறது. சுவாதி கொலை நடந்த இடத்தில் மட்டும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் தற்போது செயல்பட்டு வருகிறது.

Leave a comment