தமிழர்களின் ஒற்றுமையைச் சிதறடித்து குறுகிய அரசியல் ஆதாயம்-ப.குமாரசிங்கம்

422 0
தமது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களிடையே ஒற்றுமையைச் சிதறடித்து குழப்பங்களை ஏற்படுத்த பல குழுக்களால் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு எமது பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் எமது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது எமது விடுதலைக்கான எமது இலட்சியப் பயணத்தில் தடங்கல்களை ஏற்படுத்தும் என கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்டக் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் தலைவருமான ப.குமாரசிங்கம் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய உணர்வாளர்களை 12ம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சந்தித்துக் தற்போதைய அரசியல் சூழ்நிலை, புதிய அரசியலமைப்பு வரைபு பற்றிய தமது கருத்துக்களை வழங்கியிருந்தார். இந்நிகழ்வுக்குக் கரைச்சிப் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்டக் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் தலைவருமான ப.குமாரசிங்கம் தலைமை தாங்கியிருந்தார். அவர் தனது தலைமை உரையின் போதே மேற்படி கருத்துக்களைக் கூறியிருந்தார்.
அவர் தனது தலைமை உரையில் மேலும் கூறுகையில், எமது தமிழினத்தின் விடுதலைக்காகப் பயணிக்கின்ற போது பல வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை எங்களுடைய வரலாற்றினூடாக நாம் கற்றுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கப்படும்போது அதனைப் பொறுத்துக்கொள்ளாத இனவாதிகளாலும் அதனைக் குழப்புவதால் தாம் எந்தளவு ஆதாயமடையலாம் என்ற தீய நோக்கம் கொண்ட எம்மத்தியில் வாழும் சில அரசியல் குழுக்களும் அதனைக் குழப்பி வந்துள்ளதை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். அதே செயற்பாடுகள்தான் தற்போதும் இடம்பெற்று வருகின்றன.
தமிழ் மக்கள் ஆணை கிடைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களது காலத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய பேரவா. அவரது காலத்தில் தமிழ் மக்களுக்குரிய நிரந்தர தீர்வுத்திட்டம் வழங்கப்படும் என்பது எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.
இந்நிலையில் எமது மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சிதறடித்து மக்களைக் குழப்பி தமிழர்களின் பலத்தை உடைப்பதற்கான செயற்பாடுகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் குறுகிய சிந்தனைகொண்ட சுயலாப அரசியல் நடாத்தும் குழுக்களால் நடைபெற்று வருகின்றன. இப்படியான சதித்திட்டங்கள் எமது பிரதேசங்களில் தற்போது மிகவும் தீவிரமான முறையில் இடம்பெற்றுவருகின்றன. இவ்விடயத்தில் எமது மக்கள் தெளிவான நிலையிலுள்ளார்கள்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரசியல் வறுமைக்குள்ளும் வெறுமைக்குள்ளும் வாழும் அரசியல் குழுக்கள் சிலவற்றின் இப்படியான சதித்திட்டங்களால் எமது மக்களது ஒற்றுமையைக் குழப்பி தமிழர்களது பலத்தை சிதைத்தழித்துவிட முடியாது என்பதே உண்மை என்றார்.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், பெண்கள் அணித்தலைவி திருமதி பிரபாமணி, பிரதேச அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment