சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

451 0

முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்ப்புப் தெரிவித்து இன்று காலை 1 1 மணிக்கு முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து   கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது.

கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பகுதியானது முள்ளியவளைக்கும் – ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி – புளியங்குளம் வீதிக்கும் இடைப்பட்ட அடர்வனத்தைக் குறிக்கும். இந்தக் காட்டில் 177 ஏக்கரை அழித்து முஸ்லிம் மக்களைக் கொண்ட குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இனப்பரம்பலை சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் இத்திட்டத்தை கட்டாயமாக எதிர்க்கவேண்டியது கட்டாயமானதொன்றாகும்.

போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, இனப் பரம்பலை சிதைக்கும் விதமாகக் குடியேற்றங்களை உருவாக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவே இந்த செயற்ப்பாட்டை முற்றாக எதிர்க்கிறோம் என்று ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

வனம் அழித்தால்இனம் அழியும். வனத்தை அழிப்பதும் எங்கள்வாழ்வுரிமையை அழிப்பதும் ஒன்றே. நிலத்தொடர்ச்சியை சிதைத்து எம் இனத்தொடர்ச்சியை அறுக்காதே. இது இனவாதம் அல்ல வன வதைக்கு எதிரான வாதம். எம் அடையாளம் இழந்து அகதியாக வாழமாட்டோம். எங்கள் வனத்தாய் மடியில் தீ வைக்காதே. இயற்கை சமநிலையை குழப்பி எம் வாழ்வை சிதைக்காதே. எங்கள் நிலம் எங்கள் வனம் காப்பது எமது கடமை. என்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஆலடிச்சந்தியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தஊரம் நடைபவனியாக சென்று இளைஞர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment