மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
முறிகண்டிப் பகுதியில் நேற்று ஓடும் ரயிலில் இருந்து வீழ்ந்த ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், பொலிஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று முற்பகல் 11.50 மணியளவில் புறப்பட்ட புகையிரதம், மாங்குளம் புகையிரத நிலையத்தை மாலை ஆறு மணியளவில் கடந்து சென்றுகொண்டிருந்த வேளை, முறிகண்டிப் பகுதிக்கு இடையில் புகையிரதத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
குறித்த புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மாங்குளம் பொலிசாரிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த நபரை தேடும் பணியில் மாங்குளம் பொலிஸ் குழு ஒன்று ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் புகையிரத வீதிக்கு அண்மையிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.