கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேருக்கு 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

369 0

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு வருகிற 28-ந் தேதி வரை காவலை நீட்டித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, பந்தநல்லூர் போலீசார், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகிய 10 பேரை கைது செய்து கடந்த 1-ந்தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து 10 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக 10 பேரையும் திருச்சி மத்திய சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். இதனால் கும்பகோணம் நீதிமன்றம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 10 பேருக்கும் வருகிற 28-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக அவர்களை போலீசார் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள், அவர்களை பார்த்து கதறி அழுதனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவர் மனைவி கவிதா(27). வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் மனவேதனையுடன் இருந்தார். நேற்று கும்பகோணத்தில் கணவரை நேரில் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார்.

முன்னதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறுகையில், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை அகற்றுவோம், அங்குள்ள நிலத்தடிநீர் பாழாகிவிட்டது. அங்குள்ள நீர் முழுவதும் கரியமில வாயுவாக மாறி விட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காரிபடுகையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும், எத்தனை வழக்குகள் போட்டாலும், கொள்கையில் இருந்து மாறமாட்டோம் என்றார்.

Leave a comment