நெடுந்தீவில் குதிரைகளை பாதுகாக்க முதலமைச்சரினால் குழு நியமிப்பு

555 7
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் உள்ள குதிரைகளை பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் குதிரைகள் இறப்பதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான வழிமுறைகளைக் கண்டறிவதற்கு, குழு ஒன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.
முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான குறித்த குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், வை.தவநாதன், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர், ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் குறித்த குழுவினர் நேற்று நெடுந்தீவு சென்று குதிரைகளின் வாழ்விடத்தை பார்வையிட்டதோடு, பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றையும் நடாத்தியுள்ளனர். குறித்த கலந்துரையாடலில் குதிரைகளை பாதுகாப்பது, குதிரைகளுக்கு தேவையான உணவு, நீர் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில் ஐங்கரநேசன் தலைமையிலான குழுவினர் நெடுந்தீவு குதிரைகளை பாதுகாப்பதற்கான தீர்வுத் திட்டங்களை உள்ளடக்கிய தமது அறிக்கையினை இரண்டு வார காலத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment