சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

337 0

சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது என்று திருநாவுக்கரசர் பொன்விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரின் பொதுவாழ்வு பொன்விழா மற்றும் 40 ஆண்டுகால சட்டமன்ற-பாராளுமன்ற பணிகள் பாராட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கராத்தே ஆர்.தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், சிவ.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு தலைவர் பி.விஸ்வநாதன் வரவேற்றார்.

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சு.திருநாவுக்கரசர் பொன்விழா மலரை வெளியிட அதனை புதுச்சேரி முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி பெற்றுக்கொண்டார். ‘கோட்டையில் ஒலித்த குரல்’ என்ற நூலை குமரிஅனந்தன் வெளியிட கே.வி.தங்கபாலு பெற்றுக்கொண்டார். கலைப்புனிதன் எழுதிய ஆய்வுநூலை கி.வீரமணி வெளியிட சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பெற்றுக்கொண்டார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் என்.ரகுவீர ரெட்டி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜி.சின்னா ரெட்டி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிடத்தில் தொடங்கி தேசிய நீரோட்டத்தில் கலந்திருப்பவர் சு.திருநாவுக்கரசர். தனிக்கட்சி தொடங்கி அதிலும் அனுபவம் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் பணியாற்றி நன்மதிப்பை பெற்றிருக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றி அவரிடமும் நன்மதிப்பை பெற்றார்.

இத்தகைய சிறப்புக்குரிய அவரை, கருணாநிதி சார்பில் வாழ்த்துகிறேன். குடும்ப உறுப்பினர் என்ற முறையிலும் வாழ்த்த வந்திருக்கிறேன்.

இன்றைக்கு சட்டமன்றம் இருக்கிறது, அதில் ஜனநாயகம் இருக்கிறதா? என்பது கேள்விக்குறி. ஜனநாயக முறையில் கருத்துகளை எடுத்துச்சொல்ல முடிவதில்லை. திருநாவுக்கரசர் பொன்விழாவில் மதவாத சக்திகளை முறியடிக்கும் உறுதியினை ஏற்போம், சபதம் ஏற்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a comment