ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கு புதிய வரி இல்லை: நிர்மலா சீதாராமன்

503 0

ஓட்டல் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. புதிய வரி இல்லை என்று மத்திய வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஓட்டல் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. புதிய வரி இல்லை என்று மத்திய வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

ஓட்டல்களில் இப்போது வரைக்கும் இட்லிக்கோ, தோசைக்கோ வரியே இல்லாமல் இருந்ததா? புதிதாக நாங்கள் வரி போடவில்லையே உள்ளூரில் போட்டோ, விற்பனை வரியோ உற்பத்தி வரியோ போட்டதினால் அதற்கு ஒரு வரி இருந்ததால் அந்த வரிக்கு சமமான முறையில் இப்போது ஜி.எஸ்.டி.யில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பழைய வரிக்கு பொருத்தமான வகையில் தான் புதிய வரியை சம விகிதத்தில் விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இட்லி சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களா? போடு… வரியை என்ற ரீதியில் நாங்கள் வரி போடவில்லை. இதில் உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு வழி இல்லை.

ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒவ்வொரு பொருளுக்கும் எந்த வரிபோட வேண்டும் என்று ஒரு பொதுவான வழிமுறை வகுக்கப்பட்டது. இப்போது இருக்கும் வரியைவிட குறைவான வரி விதிப்பு தான் இருக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து பொதுவான ஆலோசனையில் நிதிவருவாய் சரிசமமான முறையில் இருக்க வேண்டும். அதாவது லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இருக்க கூடாது என்றும் உனக்கும் லாபம் எனக்கும் லாபம் அல்லது உனக்கும் நஷ்டம் இருக்க கூடாது, எங்களுக்கும் நஷ்டம் இருக்க கூடாது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாநிலமும் நிதி மந்திரியை ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் உறுப்பினராக இடம் பெறச் செய்து இருந்தது. அப்போது கொடுக்கல் வாங்கல் போல் அனைவரும் ஒப்புக் கொண்டனர். இதில் ஒரு மாநிலத்தில் ஒருவேளை பொருட்கள் விலை ஏற்றம் அல்லது விலை குறைவு ஏற்பட்டால் அதற்கு ஒப்புதல் அளிக்க அந்த மாநில நிதிமந்திரிதான் பொறுப்பு.

18 சதவீதத்துக்கும் கீழ் இருக்க கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டால் அதில் 81 சதவீதம் பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 1,200 பொருட்களுக்கு மேல் ஜி.எஸ்.டி.யில் இருப்பதால் விலை வாசி உயராது.

இனி கணக்குகளை பேப்பர்களில் எழுதாதீர்கள், கம்ப்யூட்டர்களில் காண்பியுங்கள் என்று சொல்கிறோம். இதன் மூலம் ஒரு கடைக்கு ஒருவர் மட்டும் என்று இல்லாமல் 10 கடைக்கு சேர்த்து ஒருவரை கம்ப்யூட்டர் வேலைக்கு அமர்த்தி அவர் கம்ப்யூட்டரில் ஏற்றிவிட்டு வந்தால்தான் வேலை நடக்கும். இதன் மூலம் கம்ப்யூட்டர் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கம்ப்யூட்டர் தெரிந்த இளைஞர்களுக்கு கடைவிதியில் ஒரு சின்ன பகுதியை வாடகைக்கு கொடுத்தால் அங்கு அமர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு கம்ப்யூட்டர் கற்று கொடுப்பார் அல்லது மாதம் ஒருமுறை அவர் கம்ப்யூட்டரில் கணக்கை ஏற்றிக் கொடுப்பார். இதற்காக மத்திய அரசு திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் தெரிந்த இளைஞர்கள் 45 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ஒரு பொருளைவிற்கும் போது விற்றவர் வரியுடன் பில்போட்டு விற்பார். அவர் அதை மற்றவருக்கு விற்பார். இப்படியே செயின் சிஸ்டம் போல் அவரது உற்பத்தி பொருள் பரவும். இதற்காக அவர் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்யாமல் கூட இருக்கலாம். ரூ.20 லட்சத்துக்கு கீழ் விற்பனை செய்பவராக இருந்தாலும், அதிகமாக விற்பனை செய்தவராக இருந்தாலும் ஜி.எஸ்.டி. அமைப்பில் பதிவு செய்தும் இருக்கலாம், பதிவு செய்யாமலும் இருக்கலாம்.

ஆனால் அவரது உற்பத்தி பொருளுக்கு கிராக்கி ஏற்படும் போது, தனது வியாபாரத்தை பெருக்கும் போது அதை வாங்கு பவர் உங்களது பொருள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்குவார். அவர் பதிவு செய்யாமல் இருந்தால் வாங்குபவருக்கு உள்ளீட்டு வரி பலன் அவருக்கு கிடைக்காது. அரசு சொல்கிறது கட்டாயப்படுத்துகிறது என்பது கிடையாது. ஆனால் பதிவு செய்தால் உங்கள் பொருளுக்கு நல்ல மார்க்கெட் கிடைக்கும்.

சிறுதொழில், குறுதொழில் அல்லது ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக இருந்து கொண்டு வியாபாரம் செய்யுங்கள். அப்போது கடலை மிட்டாய்க்கு வரி கிடையாது. நீங்கள் பர்கர் கூட செய்யுங்கள். ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் உங்களுக்கு வரி இல்லை.

ஆனால் பர்கருக்கும் வரி, கடலை மிட்டாய்க்கும் வரி என்று எளக்காரமாக சொல்லக் கூடாது. ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்த பஞ்சு மிட்டாய்க்கும் வரி இல்லை. கடலை மிட்டாய்க்கும் வரி இல்லை. ஆனால் அதே கடலை மிட்டாயை சர்வதேச அளவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் போது பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்யும் போது அதன் வியாபாரம் ரூ.20 லட்சத்துக்கு மேல் சென்றால் நீங்கள் வரிகட்டியாக வேண்டும். எனவே அதில் எந்த பொருள் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. பொருளின் மதிப்புக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படவில்லை. விற்பனைக்கு ஏற்பதான் வரி போடப்படுகிறது. ஆனால் உணவுப் பொருள்களின் மீது மட்டும் இந்த மாதிரி விதிக்கப்படவில்லை.

பட்டாசுக்கான 28 சதவீத வரி விதிப்பு பற்றி சொல்கிறார்கள். ஒரு பொருளை விற்பனை செய்யும் போது அதற்கான உள்ளீட்டு வரிகளை கழித்த பின்பு பொருள்களுக்கு வரி விதிக்க வேண்டும். ஏற்கனவே 17 சதவீதம் வரை உள்ளீட்டு வரி வரவுகளை பெற்றுக் கொண்டு தற்போது 28 சதவீதம் வரி கட்டும் போது ஏற்கனவே இருந்த உள்ளீட்டு வரிகளை கழித்தால் 12 சதவீதம் தான் வரும். இது குறைவு தானே.

தங்கத்தைப் பொறுத்த வரை அதில் வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடிய தொழில். பல லட்சக்கணக்கானவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். நகை தொழில் என்பது நமது பாரம்பரியம் மிக்க தொழில். ஒரு காலத்தில் கோவையில் நகைத் தொழில் முக்கியமாக இருந்தது. இன்று அங்கு நகை தொழிலே அழிந்து விட்டது. எனவே நகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கவே நகைகளுக்கு 3 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் கோவையில் அதிகம் உற்பத்தியாகும் கிரைண்டர்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக வரி அதிகரித்து இருப்பதாக என்னை சந்தித்து முறையிட்டனர். உடனே நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் கிரைண்டர் மீதான வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு சிபாரிசு செய்துள்ளனர்.

ஜி.எஸ்.டி.யைப் பற்றி நாங்கள் 1 வருடமாக பேசிக் கொண்டு இருக்கிறோம். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. 1 வருடமாக நமது மந்திரிகள் அதில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் என்ன ஆலோசனை நடந்தது. அதில் என்ன முடிவு எடுத்தோம் என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொண்டு இருந்தோம். ஆனால் எங்க வரப்போகிறது ஜி.எஸ்.டி. என்று இருந்து விட்டோம்.

இப்ப வந்து அய்யோ வருதா?… அய்யய்யோ, பூதம் வருது, பூதம் வருது என்று பயம். ஏன் பயம் நம்ம ஆட்களும் அதில் கலந்து கொண்டனர். இந்த முடிவு எடுப்பதில் அவர்களுக்கும் பங்கு இருந்தது. ஆனால் யாரோ டெல்லியில் இருந்து இந்த பூதத்தை அனுப்புகிறார்கள் என்று சொன்னால் அது சரியல்ல. ஜி.எஸ்.டி. கவுன்சில் 10 வருடமாக இருக்கிறது.

அரசியல் சட்ட பாதுகாப்பு பெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் வரியை நிர்ணயிக்கிறது. மத்திய அரசு அல்ல. ஜி.எஸ்.டி.யில் அனைவருக்கும் சம உரிமை. பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்த காலத்தில் இருந்து விவாதம் நடந்து வருகிறது. அதனால்தான் பிரதமர் மோடி பேசும் போது இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தலைவர்களது பெயர்களையும் கூறி இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது என்றார்.

கம்யூனிஸ்டுகள் இன்று எதிர்க்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த நிதி மந்திரி கலந்து கொண்டாரே, அவர் ஒருமுறையாவது எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தாரா? இது ஒருமனதாக அனைவரும் சேர்ந்து சரி சமமாக எடுத்த முடிவு.

நாம் எப்படி தெரியுமா? ஐயோ என் காதில் ஒரு தகவல் வந்து விட்டது, அது நிஜமா… பொய்யா… என தீர விசாரிக்காமல், ஐயோ… ஆமாம்… இந்த அரசு மோசம், இவர்கள் இப்படித்தான் பண்ணுவார்கள், ஏழைகளை வாட்டுவார்கள் என்ற எண்ணத்தோடு சொல்ல வேண்டுமானால் சொல்லலாம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a comment