முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதிசேகரிப்பில் நடந்தது என்ன?

7685 0

வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரின் செயற்பாடுகளுக்குக் களங்கம் கற்பித்து மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்துவதே இவ்வாறு எழுதுவோரினதும் அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களினதும் நோக்கமாகும்.

முதல்வர் தொடர்பில் களங்கம் ஏற்படுத்துவதற்கு வலுவான காரணங்கள் அற்றநிலையில் சிலர் கனடாவில் முதல்வர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்த நிதிசேர் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட 50,000 டொலர்களைப் பெற்றுக்கொண்ட முதல்வரின் ஆலோசகர் திரு நிர்மலன் கார்த்தியேன் அந்த நிதியைப் பயன்படுத்தியதற்காக ஆதாரங்களை வெளியிடவில்லை என்ற உண்மைக்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியைத் திரு டி.பி.எஸ் ஜெயராஜ் என்பவர் எழுதியுள்ளார்.

முதல்வர் கனடாவில் தங்கியிருந்த வேளை, இந்த நிதியை அவர் சார்ந்த எவரும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த நிதிசேர் நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் நன்கு அறிவர்.

இந்த நிகழ்வு தொடர்பாக சீட்டுகளை விற்பனை செய்தபோதும் ஊடகச் சந்திப்புகளின் போதும் நிதிசேகரிப்பின் கணக்கு விபரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் மக்களுக்கு உதவும் நோக்கில் முதல்வரின் நிதியத்துக்கு இந்த நிதி போய்ச்சேர வேண்டும் எனவும் பலரும் வெளிப்படையாக கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் கடந்த மே மாதம் நிதிசேர் நிகழ்வு தொடர்பான முழுமையாக கணக்கு விபரங்களை கனடிய தமிழர் சமூக அமையம் ஊடகங்களுக்கு வெளியிட்ட்டிருந்தது.

அந்தக் கணக்கு விபரத்தில் தமது கையிருப்பில் இருக்கும் தொகையைச் சுட்டிக்காட்டி, அனுப்பப்பட வேண்டிய அந்த நிதி தம்மிடம் இருப்பதாகவும் கனடிய தமிழர் சமூக அமையம் குறிப்பிட்டிருந்து. இந்த நிலையில் தான் வேண்டுமென்றே முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி வந்துள்ளது.

பொறுப்புள்ள ஊடகவியலாளர் எனக் கூறிக்கொள்ளும் கட்டுரையாளர் அவதூறு ஏற்படுத்தவல்ல ஒரு செய்தியை எழுத முன்னர் தொடர்புபட்டோரிடம் விபரங்களைக் கேட்டறிந்திருக்க வேண்டும். அதுவே ஊடக அறம்.

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுவோரிடம் எவ்வகையான அறத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துக் கொண்டார் மெய் பிறழ்ந்த கட்டுரையாளர்.

ஜனவரியில் சேகரிக்கப்பட்ட நிதி இன்னமும் முதலமைச்சருக்கு அனுப்பப்படாமல் இருப்பதற்கும் நியாயமான காரணம் இருக்கிறது. இந்தத் தொகை முதல்வர் நிதியத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே பணத்தை வழங்கிய பலரதும் வேண்டுகோளாக இருந்தது.

இவ்வாறான ஒரு நிதியத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை வடமாகாண முதல்வர் இரண்டாண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருந்தார். அதற்குரிய அனைத்துப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு இலங்கை அரசின் அனுமதி பெறுவதற்காக அனைத்து விபரங்களும் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இரண்டாண்டுகளாக அதற்கான ஒப்புதலை வழங்காமல் ஆளுனரும் அரசும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. விரையில் ஒப்புதல் தருவோம் எனக் கூறி கால நீடிப்புச் செய்து வருகின்றார்கள். இந்த நிதியத்தில் வைப்பிலிட வேண்டும் என்று காத்திருப்பதாகவும் அதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு அரசு மேலும் காலந் தாழ்த்துமானால் வேறு வழிகள் மூலம் அந்த பணத்தை அனுப்ப நடவடிக்கை எடுக்கபப்டும் என்றும் கனடிய தமிழர் சமூக அமையம் கூறியுள்ளது.

இந்த உண்மையை தெளிவாக அறிந்துகொண்டே, வட மாகாணசபையில் ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி முதல்வர் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு இந்த நிதிசேர் நிகழ்வைக் கைலெடுத்துள்ளனர்.

இச்செய்தி எழுந்த சூழ்நிலை, எழுதியதன் நோக்கம் எழுதியவர்களின் பின்னணியைப் புரிந்து கொண்டால் உண்மைகளை எவருமே இலகுவில் புரிந்துகொள்ள முடியும்.

டி.பி.எஸ் ஜெயராஜின் கட்டுரையை அடிப்படையாக கொண்டு முதலமைச்சருக்கு எதிராக செயற்படும் சில பத்திரிகைகளும் இணையத்தளங்களும் முக்கியத்துவம் கொடுத்து இந்த செய்தியை பிரசுரம் செய்துள்ளன. இதுதொடர்பில் முதலமைச்சர் அலுவலகம் அவர்களுக்கு அனுப்பியுள்ள பதிலில் சட்டரீதியாக இந்த விடயம் தொடர்பில் உண்மைகள் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டிருக்கின்றமை எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன என்பதை கோடிட்டு காட்டுகிறது.

Leave a comment