மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு வேண்டாம் என்கிறது: பொன். ராதாகிருஷ்ணன்

242 0

பிரதமர் மோடி தமிழக மக்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு வேண்டாம் என கூறுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல் கட்சியினரும் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம். ஆனால் அதனை நிறைவேற்றி வருவது நரேந்திர மோடி அரசுதான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மோடி அளித்து வருகிறார்.

பாமர மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்படுத்தி வருகிறார். இளைஞர்களுக்கு படிப்பிற்கும் மேலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காப்பீட்டு திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எல்லா மக்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கும்.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கழிவறை இல்லாத பள்ளிகளே இருக்கக் கூடாது என்று பிரதமர் உத்தரவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து மின்சாரமே பார்க்காமல் 18 ஆயிரம் கிராமங்கள் இருந்தன. இவை அனைத்திற்கும் ஆயிரம் நாட்களுக்குள் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி அந்த கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்க பல்வேறு திட்டங்களை அளித்துள்ளார். பயிர் காப்பீட்டு திட்டம் என அறிவித்து விவசாயத்திற்கு முன்பும், விவசாயம் நடைபெறும் போதும், அறுவடை நடைபெறும் போதும், எப்போது பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரண உதவி கிடைக்கும் அளவில் இந்த திட்டம் உள்ளது. இதனை விவசாயிகளுக்கு கொண்டு சென்றிருந்தால் விவசாயிகள் பலர் இறந்திருக்க மாட்டார்கள். இதனை மாநில அரசுதான் செய்ய வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு வேண்டாம் என கூறுகிறது. மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் சதி நடக்கிறது. ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுகின்ற கட்சியாக இருந்தாலும் சரி இதே நிலைமை தான்.

தமிழகத்தில் புதிதாக இணையம் வர்த்தக துறைமுகம் வர உள்ளது. இதனை சேர்த்து மொத்தம் 5 துறைமுகங்கள் தமிழகத்தில் இருக்கும். இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மதுரை-கன்னியாகுமரி, மணியாச்சி -தூத்துக்குடி, நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரெயில் பாதையை இரட்டை ரெயில் பாதையாக மாற்றவும், மின்மயமாக்கவும் ரூ.3,400 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம், தென்காசி வழியாக காவல்கிணறு வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். பிரதமர் மோடி தமிழக மக்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள தமிழர்களை சந்தித்து பேசுகிறார். இந்தியாவில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன.இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a comment