சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலோடு சேர்ந்தியங்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

1833 0

அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் 2009 ற்கு பின் நலிவடைந்து போயிருக்கும் தமிழர்களுக்கான தேவையினை உணர்ந்து தம்முடைய வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவார்களென்ற நம்பிக்கையில் கூட்டமைப்புக்கு வாக்களித்து பிரதிநிதிகளாக்கிய மக்களின் எதிர்காலத்தை தம்முடைய அரசியல் அபிலாசைகளின் பொருட்டு சிங்கள அரசின் கையில் ஒப்படைத்திருக்கிறது வடக்கு மாகாணசபை.

அரசியல் சூழ்ச்சிகளை உணர்ந்து செயற்படும் தளத்தில் இருந்து வந்திருக்காத நீதியரசர் விக்னேஸ்வரனை மக்கள் முதல்வராக்கியதற்கான காரணம் அவர் படித்த பின் புலத்தில் இருந்து வந்திருப்பவர் என்பது மட்டுமல்ல, கடந்த கால அரசியல்வாதிகள் போல் சிங்கள அரசின் சதிக்கு விலை போகாமல் நீதியான முறையில் செயற்படுவார் என்பதனாலாகும், ஆரம்ப காலகட்டங்களில் கூட்டமைப்பின் சதியினைப் புரியாமல் அவர் இருந்தார் ஆயினும் மக்களோடு நேரடியாகப் பழகி, தமிழ்த் தேசிய உணர்வாளர்களைச் சந்தித்த போது உண்மையை நிலையினை உணர்ந்து கொண்ட அவர் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்க வழிமுறையினைப் பின் பற்றினார்.

தமிழர்களது சுயநிர்ணய உரிமை விடையத்தில் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்படாமல் சமரசம் இன்றி அண்மைக்காலமாக செயற்பட்டு வருகின்றமையானது மக்களிடத்திலே அவருக்கு செல்வாக்கைப் பெருக்கி இருந்தது. அத்துடன் மாகாண சபையில் மக்கள் செல்வாக்கைப் பெற்ற அமைச்சர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததனாலும் அவரால் ஓரளவுக்கு பலமாக செயற்பட முடிந்தது.

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலோடு சேர்ந்தியங்கும் கூட்டமைப்பின் மற்றைய உறுப்பினர்கள் மாகாணசபையில் அவருக்கு பக்கபலமாக இருக்கும் அமைச்சர்களை உடைப்பதன் மூலம் அவரைப்பலவீனப்படுத்த நினைத்து அவருக்குத் துணையாக நின்ற மாகாணசபை உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகிய அரசியற்சதி அனுபவமற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் இதன் பின்னாலுள்ள சதியினைப் புரிந்து கொள்ளாமல் பொதுவெளியில் அவருடன் நின்றவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து நீதியினை நிலை நாட்டும் பொருட்டு ஓர் குழுவை நிறுவினார். விசாரணைக்குழுவின் அனுமானமான குற்றச்சாட்டுகளின் பிரகாரம் நீதியினை நிலை நாட்டும் பொருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை தங்களது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு சபையில் வலியுறுத்தினார்.

அந்தவேளையில் எவரெல்லாம் சேர்ந்து கையெழுத்திட்டு குற்றச்சாட்டை விசாரிக்குமாறு ஆரம்பத்தில் கூறினார்களோ அவர்களே அந்த சந்தர்ப்பத்தை அவருக்கெதிரான நிலைப்பாடாக மாற்றினார்கள்.

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லாது தமிழ் மக்களுக்கான தேவையினை நிறைவேற்றுவார்களென்ற நம்பிக்கையில் தமிழ் மக்களால் வாக்களிக்கப்பட்டு அரசியல் அதிகாரத்துக்கு அனுப்பப்பட்ட தமிழ்த் தலைமைகள் இன்று தம்முடைய பதவிக்காக மீண்டும் தமிழ் மக்களின் நம்பிக்கையை தம்முடைய முதல்வருக்கு எதிராக ஆளுனரைச் சந்தித்து சிங்கள அரச இயந்திரத்தின் கைகளில் ஒப்படைத்தமையானது மன்னிக்க முடியாத குற்றமும் தமிழ் மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமுமாகும், நிகழ்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் தாற்பரியத்தை உணராது தங்களது அதிகாரமும், நலன்களும் மட்டுமே தேவையென விடுதலைக்காக உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின், பொதுமக்களின் போராளிகளின் கனவை குழி தோண்டிப் புதைத்த கூட்டமைப்பின் இந்த மன்னிக்க முடியாத வராலாற்றுத் துரோகத்தை மக்களவை வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a comment