மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு உயர்வு!

239 0

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மூன்றில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு அன்புமனி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மூன்றில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்நடவடிக்கை தாமதமான ஒன்று என்றாலும் வரவேற்கத்தக்கதாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நெடுங்காலமாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது அவர்களின் நலனுக்கு பெரிதும் உதவும். கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும் பெரும்பாலான பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. இப்போது இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நிலையில், இந்த ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக இடஒதுக்கீடு 4 பிரிவுகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது என்றாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை முறைப்படி கணக்கெடுத்து, அதனடிப்படையில் உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.