சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளன.
அத்துடன், தமது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் ‘ஆரோக்கியா’ நடமாடும் மருத்துவ முகாம்களிலிருந்து எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் விலகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலவச சுகாதார சேவையைப் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத் துறையினரின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரதான நோக்கங்களை முன்னிறுத்தி இந்த ‘சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன ரத்னசிங்கம் குறிப்பிடுகையில்,
வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குச் சுகாதார அமைச்சு சாதகமான பதில்களை வழங்காததால், தற்போது 7 வகையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். வைத்தியசாலையில் இல்லாத மருந்துகளை வெளியிலிருந்து நோயாளிகள் கொள்வனவு செய்வதற்கான துண்டுகளை வழங்காதிருத்தல் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பங்கேற்காதிருத்தல் போன்ற தீர்மானங்களை நாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
சுகாதார அமைச்சு, சுகாதார தொழிற்சங்கங்களுடன் எவ்விதக் பேச்சு வார்த்தையினையும் முன்னெடுக்காது, தன்னிச்சையாகவே ‘ஆரோக்கியா’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது. இவ்வாறான அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்கப்போவதில்லை.
எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் வைத்தியர்கள் இந்தநடவடிக்கைகளில் இருந்து விலக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தொடர்ந்தும் தலைக்கனத்துடன் செயற்படுமானால், ஆரம்ப சுகாதாரப் பிரிவுகளிலும் எமது போராட்டங்களை விரிவுபடுத்த நேரிடும். ஆகவே, உடனடியாக சுகாதார அமைச்சு எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும் என்றார்.

