“பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுதான் ஜெயலலிதாவின் முதுகில் குத்திய துரோகச் செயல்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, ஈரோடு செல்லும் வழியில் திண்டுக்கல்லில் இன்று (பிப்.28) மாலை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தனது கட்சியினரை சந்தித்துப் பேசினார். திண்டுக்கல் தோமையார்புரத்தில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் நாளை பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டம் நடக்கும் இடத்தில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பெரியாரின் புகைப்படத்தை பாஜகவினர் அகற்றும்படி கூறியதாக சொல்கிறார்கள். பெரியார் புகைப்படத்தை அகற்றத்தான் செய்வார்கள். அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களை பாஜகவினர் அகற்றாமல் அதிமுகவினர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.
மதுரையை அயோத்தியாக மாற்றுவோம் என பாஜகவினர் கூறுகின்றனர். மதுரை தமிழகத்தில் இருக்கிறது. வட இந்தியாவில் இல்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இல்லை. ஆகவே, திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றமாகத் தான் இருக்கும். ஒருநாளும் அது அயோத்தியாக மாற தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். பிரதமரின் முருகப்பெருமான் தரிசனம் அவருக்கு நல்வழி காட்டுவதாக அமையவேண்டும்.
குறிப்பாக, மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. சமூக நல்லிணக்கத்துக்குத் தான் இடமுண்டு. அதுதான் முருகப்பெருமானின் வாழ்க்கையும், வரலாறும் நமக்கு உணர்த்தும் பாடம். வள்ளி, தெய்வானை ஆகிய இருவரையும் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றவர் முருகப்பெருமான். அதுவே சமூக நல்லிணத்துக்கான சான்று. இந்த வாழ்வியல் உண்மையை முருகப்பெருமான் பிரதமருக்கு உணர்த்துவார் என்று நம்புகிறேன்.
விசிக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும். அது தமிழக மக்களின் நலனை மையமாக கொண்டிருக்கும். எங்களுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சின்னம் குறித்த எந்தச் சிக்கலும் இந்தத் தேர்தலில் இல்லை. சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம். தொகுதிகள் எத்தனை என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும்.

