பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். அப்போது பிரதமர் மோடி போல, இந்திய பாரம்பரிய உடையை அவர் அணிந்திருந்தார்.
முன்னதாக, இருவரும் இணைந்து ஜெருசலேமில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியை பார்வையிட்டனர். ஹிட்லர் ஆட்சியின்போது கொல்லப்பட்ட யூதர்கள் நினைவாக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு, உயிரிழந்த யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து மோடியும், நெதன்யாகுவும் முக்கிய ஆலோசனை நடத்தினர். நிறைவாக, அவர்களது முன்னிலையில் இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 10 முக்கிய அறிவிப்பு களும் வெளியிடப்பட்டன.
குறிப்பாக வேளாண்மை தொழில் நுட்பங்கள், செயற்கைக் கோள் தரவுகள், யு.பி.ஐ. பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

