புதுக்கோட்டையில் நரிக்குறவர் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதில் அலட்சியம்!

9 0

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் ரெங்கம்மாள் சத்திரத்தில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வீடுகள் கட்டும் பணி முழுமை அடையாததால் மக்கள் வீதியில் குடியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கம்மாள்சத்திரம் மற்றும் கறம்பக்குடியில் நரிக்குறவர் (பழங்குடியினர்) இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்ட சில குடும்பத்தினருக்கு 2022-23-ல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சத்தில் 107 வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

ஆனால், 3 ஆண்டுகளைக் கடந்தும் வீடுகள் முழுமையாக கட்டப்படாமல், அனைத்து வீடுகளுமே பாதியில் நிற்கின்றன. இதனால், வீடுகளின்றி வீதியில் குடியிருக்கும் அவல நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கறம்பக்குடி, ரெங்கம்மாள்சத்திரம் பகுதி நரிக்குறவர் இன மக்கள் கூறியது: கறம்பக்குடியில் 39 வீடுகளும், ரெங்கம்மாள்சத்திரத்தில் 68 வீடுகளும் தலா ரூ. 2.10 லட்சம் வீதத்தில் ஒரு அறை கொண்ட வீடாக கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் கட்டுமானப் பணியும் பாதியிலேயே நிற்கிறது.

இதனால், உடைமைகளை வீதியில் போட்டுவிட்டு அங்கேயே குடியிருந்து வருகிறோம். பனி, மழைக்காலத்தில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். எனவே, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வீடுகளையும் முழுமையாக கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து எம்எல்ஏ எம்.சின்னதுரை கூறியது: ரெங்கம்மாள் சத்திரத்தில் 20 வீடுகள் பாதிவரை சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. 20 வீடுகள் தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளன. 7 வீடுகளின் கட்டுமானப் பணியே தொடங்கவில்லை. மற்ற வீடுகளில் கதவு, ஜன்னல் பொருத்தவில்லை.