ஜேர்மன் அரசியலில் புலம்பெயர்தல் முக்கிய விடயமாக மாறியுள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் ஜேர்மன் மக்களை சமாதானப்படுத்துவதற்காகவும், சிரிய அகதிகளை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது ஜேர்மன் அரசு.
பணம் கொடுக்கிறோம், உங்கள் நாட்டுக்கே சென்றுவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதுபோல், பெரியவர்களுக்கு ஆளுக்கு 1,000 யூரோக்களும், சிறுவர்களுக்கு ஆளுக்கு 500 யூரோக்களும் கொடுத்து சிரிய புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவருகிறது ஜேர்மனி.
அவ்வகையில், கடந்த ஆண்டில் மட்டும் சிரியா நாட்டவர்கள் 5,976 பேர் தாமாக முன்வந்து சிரியாவுக்குத் திரும்புவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் 3,678 பேர் சிரியாவுக்குச் சென்றுவிட்டார்கள்.
விடயம் என்னவென்றால், சிரியா நாட்டவர்கள் உள்நாட்டு யுத்தத்துக்குத் தப்பி ஜேர்மனிக்கு வந்தபோது சிரியா இருந்த நிலையில் இப்போது சிரியா இல்லை.
பல நகரங்கள் முழுவதுமாக சிதைந்துபோயுள்ளன. சில நகரங்களில் ஒரு வீடு கூட வாழ்வதற்குத் தகுதியான நிலையில் இல்லை.

பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடங்கள் இல்லை. அதைவிட முக்கியம், மருத்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
தங்கள் தாய்நாட்டை விட்டுவிட்டு வந்தவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புவார்கள், சிரியா நாட்டவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்கிறார் தொண்டு நிறுவனம் ஒன்றைச் சார்ந்த சாண்ட்ரா லொரென்ஸ் என்பவர்.
ஆனால், அவர்கள் திரும்பிச் சென்றால் தாங்கள் எங்கு வாழ்வோம் என்பது குறித்து சிரியாவிலிருக்கும் யாரிடமாவது கேட்டு உறுதி செய்துகொள்வது நல்லது.
ஏனென்றால், பல நகரங்கள் சிதைந்துபோய்விட்டன. அங்கு சென்று உடனடியாக புதுவாழ்வைத் துவக்கும் நிலையில் சிரியா இல்லை என்கிறார் அவர்.

அதேபோல, Left Party கட்சியின் தலைவரான ஐரிஸ் (Iris Schwerdtner) என்பவரும், சிரியாவில் இன்னும் நிலைமை முற்றிலுமாக சீரடையவில்லை என்கிறார்.
இந்த நேரத்தில் சிரியா நாட்டவர்களை நாடுகடத்தவும் கூடாது, தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்குச் செல்லுமாறு கூறவும் கூடாது என்று கூறும் அவர், சிரியாவுக்கு புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவது குறித்து விவாதிப்பது, இந்த நேரத்தில் முறையற்றது என்கிறார்.

