சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026.

22 0

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு.

சிங்களப் பேரினவாத அரசு தமது எழுபத்தெட்டாவது (78வது) சுதந்திர நாளைக் கொண்டாடும் இச்சூழலில், தமிழர் தாயகத்தில் தமிழினத்தின் மீது திட்டமிட்டும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பினை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில், சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் காத்திரமான கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், சுவிஸ் நாட்டிலும் பேர்ண் மாநிலத்தில்; 04.02.2026 அன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இனஉணர்வாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் சிறிலங்கா அரசின் போலிச் சுதந்திரநாளிற்கெதிராகவும், தமிழின அழிப்பிற்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் தமது கோசங்களை பதாதைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இனவழிப்பினையும், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் அடக்குமுறைகள் மற்றும் மனிதஉரிமை மீறல்களையும் வேற்று நாட்டு மக்களிடம் இக் கவனயீர்ப்பில் கலந்து கொண்ட இளையோர்கள் தமது வாழிட மொழிகளில் விளக்கினர். மேலும் தமிழர்களின் உரிமைப் போராட்டம் இன்னும் முடிவுறவில்லை என்பதனையும், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்பதனையும் இக் கவனயீர்ப்பானது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

சுவிஸ் தமிழர் அரசியல்துறை.